
தேசம் செய்தியின் எதிரொலி காரில் வாழ்க்கை நடத்திய குடும்பமாதுவுக்கு மக்கள் வாடகை வீடு தேடித்தந்தனர்
கிள்ளான், மார்ச் 31-.
கிள்ளான், செந்தோசா வட்டாரத்தில் வீடு இல்லாமல் கடந்த மூன்று நாட்களாக காரில் குடும்பம் நடத்தி வந்த ஒரு குடும்ப மாதுவுக்கு மக்கள் வீடு தேடித்தந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தேசம் வெளியிட்ட செய்தியை பார்த்த கிள்ளான் வட்டார மக்கள் சமூக சேவையாளர் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து உதவி வழங்கியதாக அந்த மாது தெரிவித்தார்.
அந்த மாதுவுக்கு செந்தோசா வட்டாரத்தில் ஒரு வாடகை வீட்டை பார்த்து குடிவைத்த அவர்கள் அந்த வாடகை வீட்டிற்கு தேவையான கட்டில், மெத்தை, நாற்காலி மற்றும் உணவு பொருட்களையும் வழங்கியதாக காணொளியில் அம்மாது சொன்னார்.

இந்த மாது ஏற்கெனவே ஒரு வாடகை வீட்டில் இருந்ததாகவும் வாடகை கட்ட முடியாமல் அந்த வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு காரில் குடும்பம் நடத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் செந்தோசா சட்டமன்ற அலுவலகத்திற்கு மூன்று முறை சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
காரில் குடும்பம் நடத்திய அந்த குடும்பமாதுவுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என்று இரு பிள்ளைகள் இருக்கின்றனர். அந்த மாதுவின் கணவர் 1,500 வெள்ளி சம்பளத்தில் வேலை செய்து வந்த நிலையில் வாடகை கட்ட முடியாமல் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அறியப்படுகிறது.
இந்த மாது தற்போது புதிய வாடகை வீட்டில் குடியேறி விட்டதாகவும் தமக்கு தேவையான பொருட்களை மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் வழங்கியதாகவும் இவர்கள் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்வதாகவும் அம்மாது கூறினார்.



