
கோலாலம்பூர், ஜூன் 10- வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை அதிகாலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார். அன்னாரின் மறைவுக்கு ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார். பாரதிராஜா மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் இவ்வேளையில் அன்னாரின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார். சில காலமாக வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்தபடியே தீவிர சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் இமயம் புதன்கிழமை காலமானார். வீட்டில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா சிகிச்சை பலனின்றித் தனது 84ஆவது வயதில் அதிகாலை காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இவரது மகன் மனோஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்த துயரத்திலிருந்து மீளாத நிலையில், பாரதிராஜாவின் இந்த மறைவு அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது எதிர்பாராதது என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார். கடந்த 1977ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவின் முகவரியை மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. திரையரங்குகளில் அதுவரை இருந்த செட்டிங் கலாசாரத்தை உடைத்து, கேமராவை கிராமத்து மண்ணிற்கு எடுத்துச் சென்ற புரட்சியாளர் பாரதிராஜா. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா எனத் தமிழ் சினிமாவின் மைல்கற்களாகக் கருதப்படும் எண்ணற்ற காவியங்களை உருவாக்கிய பாரதிராஜாவின் கலைச் சேவையைப் பாராட்டி, மத்திய அரசு நாட்டின் உயரிய ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கௌரவித்தது. இதுமட்டுமன்றி பல தேசிய மற்றும் மாநில விருதுகளையும் வென்று சாதனை படைத்தவர் பாரதிராஜா. இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.



