
அம்பாங் ஜெயாவில் இடைநிலைப்பள்ளி ஒன்றைச் சேர்ந்த மூன்று மாணவர்கள், தங்களது சக மாணவரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான காட்சி அடங்கிய 3 நிமிடம் 28 விநாடி காணொளியானது
சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர்களில் ஒருவரின் காதலியைப் பாதிக்கப்பட்ட மாணவர் தொந்தரவு செய்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டே தாக்குதலுக்குக் காரணமாக இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளியிலிருந்து அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புப் படிக்கட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மூன்று மாணவர்களால் அறைந்தும், பலமுறை உதைத்தும் தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மலேசிய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 147 (கலவரம்), பிரிவு 507B ஆகியவற்றின் கீழ் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



