MalaysiaPolitics

மலேசிய இந்தியர் சமுதாயத்தின் முடிசூடா மன்னன்! நவீன மலேசியாவின் சிற்பிகளில் ஒருவர்! தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோரை உருவாக்கிய தலைவர்! மறைந்தாலும் மக்கள் மனங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் துன் ச.சாமிவேலு  !! தேசம் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச், 7- மலேசிய இந்தியர்களின் கம்பீரத் தலைவர் துன் சாமிவேலு அவர்களின் 90 வயது பிறந்தநாள் இன்று மார்ச் 8. மறைந்தாலும் மக்கள் மனங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் துன் டாக்டர் சாமிவேலு சாதனைத் தலைவர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் ஒரு சகாப்தம் துன் சாமிவேலு. தன் உழைப்பாலும், மதிநுட்பத்தாலும் நாட்டின் மேம்பாட்டிற்கு முக்கியத்தும் வழங்கி மாற்றியமைத்த ‘கட்டடக்கலைஞர்’ துன் ச. சாமிவேலு அவர்களின் பிறந்தநாள் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுப்பணி அமைச்சராக துன் சாமிவேலு நிகழ்த்திய சாதனைகள் கொஞ்சமல்ல. பினாங்கு பாலம், வடக்கு – தெற்கு நெடுஞ்சாலை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நெடுஞ்சாலைகளை அமைத்த பெருமை துன் சாமிவேலு அவர்களையே சாரும். மலேசியா மட.டுமல்லாமல் இந்தியா, துபாய், வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் நெடுஞ்சாலை அமைத்தவர் துன் சாமிவேலு. மலேசிய நாட்டில் பொதுப்பணி அமைச்சராக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் துன் சாமிவேலு. கடந்த 8 மார்ச் 1936-இல் பிறந்த துன் சாமிவேலு அவர்களுக்கு இன்று 90 வயது பிறந்தநாள். ஒரு சாதாரண அலுவலக உதவியாளராக தன் பணியை தொடங்கி, கட்டிடக்கலை நிபுணராக உயர்ந்து, 31 ஆண்டுகள் ம.இ.காவின் தேசியத் தலைவராகப் பீடுநடை போட்டவர் துன் சாமிவேலு. நவீன மலேசியாவின் உள்கட்டமைப்பைச் செதுக்கிய பெருமை இவரைச் சாரும். பினாங்கு பாலம் முதல் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வரை இன்று நாம் காணும் பல பிரம்மாண்டங்கள் அனைத்தும் இவரின் தொலைநோக்குப் பார்வையின் அடையாளங்கள். “கல்வியால் மட்டுமே ஒரு சமூகம் உயர முடியும்” என்று நம்பியவர் துன் சாமிவேலு. இந்திய மாணவர்கள் மேற்கல்விக்காக ஆங்காங்கே வாய்ப்புகளை தேடுவதை கண்டு மனம் கலங்கி ஒரு சொந்த பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டும் என்று மனதில் கங்கணம் கட்டிக் கொண்டு 500 மில்லியன் செலவில் கட்டமைத்து உருவாக்கியதுதான் ஏய்ம்ஸ்ட் (AIMST) பல்கலைக்கழகம். இன்று அதன் கடனாக இருந்த 400 மில்லியன் வெள்ளியை கட்டி முடித்தவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன். MIED மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை இந்திய மாணவர்களின் மருத்துவர் மற்றும் பொறியாளர் கனவுகளை நனவாக்கியவர் துன் சாமிவேலு. இன்று இந்திய மாணவர்கள் நம்பிச் செல்லும் இடமாக ஏய ம்ஸ்ட் பல்கலைக்கழகம் திகழ்கிறது. அரசியல் என்று வரும் போது பலரை உருவாக்கிய பெருமை துன் சாமிவேலு அவர்களையே சாரும். தற்போதைய ம.இ.கா தேசிய தலைவர் தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், டத்தோ டி.மோகன் என்று பலரை அரசியலுக்கு அழைத்து வந்து வந்து, ஊக்கமளித்து, தலைவராக உருவாக்கிய பெருமை துன் சாமிவேலு அவர்களையே சாரும். “எங்களின் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய மறைந்த துன் சாமிவேலு அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவர் வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்ல; மலேசிய இந்தியர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர். எங்களைப் போன்ற பல தலைவர்களை உருவாக்கிய ஆசான் அவர். துன் அவர்கள் இட்ட அடித்தளத்தில்தான் இன்று ம.இ.கா வலுவாக நின்று கொண்டிருக்கிறது என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டினார்.  அவர் காட்டிய பாதையில், இந்திய சமுதாயத்தின் உரிமைகளுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். நீங்கள் எங்களின் இதயங்களில் என்றும் வாழ்வீர்கள்.” என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார். தனிமனிதனாக தன் வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு சமுதாயத்தின் அடையாளமாக மாறியவர் துன் சாமிவேலு. காலம் மாறலாம்; காட்சிகள் மாறலாம்; ஆனால் துன் சாமிவேலு எனும் பெயர் மலேசிய மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நினைவுகூர்ந்தார். இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டவர். இந்திய சமூகத்திற்கு பிரச்சினை என்றால் அமைச்சரவையில் துன் சாமிவேலுவின் குரல் ஓங்கி நிற்கும். இன்று அனைவரும் அவரைவிட சிறந்த தலைவர் யாரும் இல்லை என்று புகழாரம் சூட்டுகின்றனர். “துன் சாமிவேலு அவர்களின் இழப்பை நாங்கள் ஆழமாக உணர்கிறோம்.”” என்று பல்வேறு சூழ்நிலைகளில் மக்கள் கூறியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button