
கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதை படைப்பை முன்னிறுத்தி அவருக்கு மலேசியாவில் பெருந்தமிழ் விருது ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அறிவிப்பு
கோலாலம்பூர்,மார்ச் 1–
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மகா கவிதை என்ற படைப்பை முன்னிறுத்தி அவருக்கு மலேசியாவில் பெருந்தமிழ் விருது வழங்கப்படுவதாக மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகமும், தமிழ்ப் பேராயமும் இணைந்து வழங்கும் சிறந்த தமிழ் நூலுக்கான பெருந்தமிழ் விருது பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதைக்கு வழங்கப்படுவதாக ம.இ.கா தலைமையகம், நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவ்வாறு தெரிவித்தார்.
இந்த மாபெரும் விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் மார்ச் 8ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அனைத்துலக வாணிப மையத்தில் நடைபெறவுள்ளது. கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்பான ஐம்பூதங்களை உள்ளடக்கிய, ஐந்து நெடுங்கவிதைகளின் பெருந்தொகுப்பு மகா கவிதை படைப்பிற்கான அங்கீகாரம்தான் இந்த பெருந்தமிழ் விருது என்று டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார். கவிதைகளால் உலகையே ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துக்கு இத்தனை காலங்கள் அவரை முன்னிறுத்தி விருதுகள் வழங்கப்பட்டது. ஆனால், முதல் முறையாக அவரது படைப்பை முன்னிறுத்தி இந்த விருது வழங்கப்படுகிறது. மகா கவிதை எனும் மாபெரும் படைப்பிற்கு, அதன் தமிழுக்கு, அந்த அறிவிற்கு விருது வழங்கப்படுகிறது என்றார்ர டத்தோஸ்ரீ சரவணன்.
கவிஞர் வைரமுத்து நீண்ட ஆய்வுக்குப் பின் எழுதிய கவிதை நூல் மகா கவிதை. கடந்த ஜனவரி 2024இல் இந்த நூல் வெளியிடப்பட்டு உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற ஐம்பூதங்களின் பிறப்பு இருப்பு சிறப்பு குறித்து விஞ்ஞான ரீதியில் எழுதப்பட்ட பெரும் கவிதை நூல் மகா கவிதை நூல்.

இந்த நிகழ்வில் மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையில் அவரது சிறப்புரையுடன் கவிஞர் வைரமுத்து இந்த பெருந்தமிழ் விருதைப் பெறவுள்ளார். இம்மாபெரும் நிகழ்வில் கிட்டத்தட்ட 1,000 பேர் வரை கலந்து கொள்ளவுள்ளனர். இதில் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
இதனிடையே கல்விமான்கள் மற்றும் தமிழ் அறிஞர்களின் வாழ்த்துரையோடும் மதிப்புரையோடும் மகா கவிதையை பெருந்தமிழ் விருதுக்கு தேர்ந்தெடுத்திருக்கும் மதியுரைஞர் குழுவிற்கு கவிஞர் வைரமுத்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த விருதளிப்பு விழாவை முன்னெடுத்திருக்கும் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விருதை தான் பெரிதும் மதிப்பதாக வைரமுத்து தெரிவித்தார்.
பெருந்தமிழ் விருது தமிழ் உலகுக்கு ஒரு மகுடம். ஆனால் இது என் ஒரு தலைக்கு மட்டுமல்ல, ஒரு தமிழ் தலைமுறையின் ஒவ்வொரு தலைக்கும் சூட்டப்படுவதாகவே கருதுகிறேன். மலேசியத் தமிழர்களுக்கும் மலேசியத் திருநாட்டுக்கும் மலேசிய மக்களுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கவிப்பேரரசு வைரமுத்து தமது நன்றியை புலப்படுத்தியுள்ளார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



