
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா அருள்மிகு பத்ரகாளியம்மன் ஆலயத்தின் 132ஆம் ஆண்டு மகோற்சவத் திருவிழா
கோலாலம்பூர்,மே 7-
ஜாலான் மஸ்ஜித் இந்தியா அருள்மிகு பத்ரகாளியம்மன் ஆலயத்தின் 132 ஆம் ஆண்டு மகோற்சவத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
நீர்வளம், நிலவளம், மலைவளம் நிறைந்த சொர்ண பூமியாக மலேசியத் திருநாட்டின் தலைநகரம் கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் 132ஆம் ஆண்டு மகோற்சவ
திருவிழா மே 11 ஞாயிற்றுக்கிழமை
மிகவும் விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
இந்த திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு மேல் நித்திய பூஜையுடன் தேவிஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. காலை 9.00 மணிக்கு மேல் ஜாலான் அம்பாங் சாலையில் இருந்து பால்குட ஊர்வலம் தொடங்குகிறது.
பக்தர்கள் வழக்கம் போல பால்குடம் எடுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்துவார்கள்.
அதன்பிறகு நண்பகல் 12:00 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து 5,000 பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்படும். மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன்- சுசிலா தம்பதியர் இம்முறை அன்னதானம் வழங்குகிறார்கள்.
மேலும் மாலை 6.30 மணிக்கு மேல் ஆலய நித்திய பூஜையை தொடர்ந்து ரத ஊர்வலமும் நடைபெறும் என்று ஆலய பொருளாளர் கிருஷ்ணபிரபு தெரிவித்தார்.
இதன் தொடர்பில் ஆலயத் தலைவர் டாக்டர் பார்த்தீபன் தலைமையில் மே 01 முதல் பலத்த பாதுகாப்புடன் திருவிழா நடைபெறுகிறது என்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
ஆலயத் தலைமை குருக்கள் பூவேந்திரன், குருக்கள் நந்தா, துணைக் குருக்கள் பகவதி ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



