
எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடர்ந்து வெற்றிநடை போட வாழ்த்துகள் உயர்கல்விக்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை நாடலாம் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அழைப்பு
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர், மே 27–
நாடு தழுவிய நிலையில் திங்கட்கிழமை வெளிவந்த
எஸ்.பி.எம் தேர்வு முடிவில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்விக்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை நாடலாம் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மாணவர்கள் பலர் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்திய மாணவர்களின் அபார கல.வித்திறனை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
எஸ்பிஎம் தேர்வு முடிவை பெற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க தயாராகி வருவார்கள்.
அந்த வகையில் தாங்கள் படிக்கப் போகும் துறையை கவனமாக தேர்வு செய்து படியுங்கள் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
இந்திய மாணவர்கள் கோலாலம்பூர் அல்லது அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டருப்பார்கள். ஆனால், தூரத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆலோசனை கூறினார்.
ஒரு மாணவனுக்கு உயர்கல்வி என்பது அவனது வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும் ஒன்றாகும். அதனை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் மெட்ரிக்குலேசன், பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு உள்ளிட்ட கல்வி பிரச்சினைகளுக்கு ம.இ.கா கல்விக்குழுவை நாடலாம் என்று விக்னேஸ்வரன் சொன்னார்.
அதேநேரத்தில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க மாணவர்கள் முன் வரலாம். மருத்துவம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட துறைகளில் மாணவர்கள் படிக்கலாம் என்றார் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் இதுவரை 17 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. இங்கு படித்த பலர் இன்று மருத்துவர்களாக இருக்கின்றனர். ஆகையால், மாணவர்கள் குறிப்பாக இந்திய மாணவர்கள் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை முதல் தேர்வாக கொள்ளலாம் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.



