
BRICS வணிகப் பேரவையின் மாநாட்டில் ஆசியான் – BRICS ஒத்துழைப்பை வலியுறுத்திய பிரதமர் அன்வார்!
BRICS வணிகப் பேரவையின் மாநாட்டில் ஆசியான் – BRICS ஒத்துழைப்பை வலியுறுத்திய பிரதமர் அன்வார்
ரியோ டி ஜெனிரோ, ஜூலை 6- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற BRICS வணிகப் பேரவையின் (BRICS Business Forum) 2025 ஆம் ஆண்டு மாநாட்டில், மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முக்கிய உரையை நிகழ்த்தினார்.
‘கண்டங்களை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்: நிலையான முன்னேற்றத்திற்கான பகிரப்பட்ட நிகழ்ச்சி நிரல்’ (Bridging Continents, Building Future: A Shared Agenda for Sustainable Progress) என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையில், ஆசியான் மற்றும் BRICS நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பிரதமர் அன்வார், ஆசியான் நாடுகள் உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நிதி அமைப்புகளை வலுப்படுத்தவும், ஒற்றைத் தலைமையான ஆதிக்கத்தில் இருந்து விடுபடவும் வர்த்தகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
“இந்த நடவடிக்கை, முன்னதாக தங்களுக்குள் வர்த்தகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்திய ஆசியானை சீர்திருத்துவதற்கான ஒரு பகுதியாகும்,” என்று அவர் தெரிவித்தார்.
மலேசியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் சீனாவுடன் இணைந்து, தங்கள் சொந்த உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இது மொத்த வர்த்தகத்தில் 10 அல்லது 20 சதவீதம் மட்டுமே என்றாலும், “சும்மா புலம்புவதில்லமல், சொந்த திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் இது மாற்றத்தைக் கொண்டு வரும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா முன்னிலையில் இந்த உரை இடம்பெற்றது.
பிரதமர் அன்வாரின் இந்த முக்கிய உரை, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், அனைத்துலக வர்த்தகத்தில் சமநிலையான அணுகுமுறையை ஊக்குவிக்கவும், ஆசியான் மற்றும் BRICS நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய பிணைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கிறது.



