
கூலாயில் உள்ள ஆலயங்களுக்கான முறையான ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்குவேன் – தியோ உறுதி
கூலாய்,ஜூலை 16-
கடந்தாண்டு கூலாய் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் 18 ஆலயங்களுக்கும், இந்திய அரசு சாரா இயக்கங்களுக்கும் மொத்தம் ரி.ம 97,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முழுமையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்கள் இத்தொகுதியின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், அவை அங்கிகரிக்கப்பட்டதாக அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
“இத்தொகுதியின் கீழ் பதிவு பெற்ற ஆலயங்கள் முறையான ஒதுக்கீட்டைப் பெற, விண்ணப்பங்களைக் கூலாய் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தில் சமர்பிக்கலாம்.” என்றார்
முன்னதாக, ஜோகூர், கூலாயில் இருக்கும் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தில் கலந்து சிறப்பித்து, நன்கொடையாக ரி.ம 5,000 வழங்கினார்.

“வழங்கப்பட்ட இந்த உதவி நிதி, ஆலய வருடாந்திர பிரார்த்தனை சிறப்பாக நடைபெற உதவும் என நம்புகிறேன்” என்றார்.
2023 -இல் இக்கோவிலுக்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் ஒதுக்கீட்டில் ரி.ம 96,000 உதவி நிதி கிடைத்துள்ளதையும் தியோ சுட்டிக் காட்டினார்.
தொடர்பு துணை அமைச்சருமான தியோ, கூலாய் நாடாளுமன்ற மக்களுக்கு சிறந்த சேவையை தொடர்ந்து வழங்குவேன் என்ற உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.
“கூலாய் நாடாளுமன்ற மக்களின் நல்லிண்ணக்கமும், ஒற்றுமையும் தொடர்ந்து காக்கப்படும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மதத்தினருக்குமான நிதி ஒதுக்கீடு அரசியல் பின்னணி பார்க்காமல் வழங்கப்பட்டு வருகிறது” என்று சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், கடந்த மாதம், கூலாய் நாடாளுமன்றத்தில் வருடாந்த உற்சவத்தை ஏற்பாடு செய்த மூன்று ஆலயங்களான லாடாங் கெளன் ஸ்ரீ மஹா மாரியம்மன் அம்மன் ஆலயம், லாடாங் சேடனாக் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் செங்காங் ஸ்ரீ மாரியம்மன் அம்மன் ஆலய சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து சிறப்பித்ததோடு, மொத்தம் ரி.ம 13,000 நன்கொடையாக தியோ வழங்கியிரிந்தார் என்பது குறிப்பிடதக்கது.



