
பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் தொடர்ந்து பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்
ஈப்போ, செப்.27 – பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் தொடர்ந்து பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவைகளுக்கு தீர்வுக்கான நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் சங்க தேசியத் தலைவர் டாக்டர் முருகமலை கூறினார். கோவிட் தொற்று காலத்தில் இந்த தொழில் துறையில் கண்ட வீழ்ச்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த பாதிப்பில் இருந்து பலர் மெல்ல மீண்டு வருகிறார்கள், அரசாங்கமும் பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது என்றார். எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இருந்தபோதும் தற்பொழுது பள்ளி பேருந்து ஓட்டுனர் தொழிலில் எதிர்பார்த்த வருமானம் இல்லை. அவர்கள் தங்களின் நிலைமையை சமாளிக்க தேவையான உதவிகள் கிடைக்க சங்கம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாகவும் கூறினார். இங்குள்ள உணவகம் ஒன்றில் நடைபெற்ற ஈப்போ இந்தியர் பள்ளி பேருந்து சங்கம் நடத்திய 35ஆம் ஆண்டு விருந்து உபசரிப்பில் கலந்துக்கொண்டு ஆற்றிய உரையில் முருகமலை இவ்வாறு பேசினார். பேருந்துகள் 32 ஆண்டுகாலம் பயன்படுத்த வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது, இதனை 35 ஆண்டுகள் பயன்படுத்த கால அவகாசத்தை அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதில் பேசிய ஈப்போ இந்திய பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் சங்கத் தலைவர் ராமதாஸ், நம்மிடையே ஒற்றுமை மேலும் வலுபெற வேண்டும், இதன் வழி மேலும் பல காரியங்களை செய்ய முடியும் என்று கேட்டுக்கொண்டார். தற்பொழுது இந்த தொழிலில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது குறைவாக இருந்து வருகிறது என்றார். இந்த நிலை நீடித்தால் பள்ளி பேருந்து ஓட்டும் பணியாளர்கள் தொழிலுக்கும் ஓட்டுனர்கள் இல்லாத நிலை ஏற்படலாம். இந்த நிலை ஏற்பட்டால் வாகன வசதிகள் இன்றி இருக்கும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப சிரமத்தை எதிர்நோக்கலாம் என்றார்.



