
சென்னை, பிப்.27-
மலேசிய தமிழ் சங்கத்தைச் சேர்ந்த 12 பேர் அடங்கிய குழுவினர் கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை என்ற புத்தகத்தை ஆய்வு செய்துப் பாராட்டி
அவருக்கு பெருந்தமிழ் விருது
மலேசியாவில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவித்துள்ளார்.
மகா கவிதை புத்தகத்திற்காக கவிஞர் வைரமுத்துவிற்கு பெருந்தமிழ் விருதை
மலேசியாவின் தமிழ் இலக்கியக் காப்பகமும், தமிழ் பேராயமும் இணைந்து வழங்குவதாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ சரவணன் இதனை தெரிவித்தார்.
இந்த விருது வழங்கும் விழா மார்ச் 8ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு மலேசியா நாட்டின் கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உட்பட பல அறிஞர்கள், தலைவர்கள் முன்னிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.
இந்த விருது விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ சரவணன் கவிஞர் வைரமுத்துவுக்கு பொன்னாடை அணிவித்து அழைப்பிதழ் வழங்கினார்.
இதனிடையே விருது சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். 90 வயது வரை யாரும் காத்திருக்க வயது இல்லை, பொறுமையும் இல்லை, விருது வழங்கும் நிறுவனத்திற்கு நான் வைக்கும் கோரிக்கை இல்லை, எனது ஆதங்கம்.
தமிழகத்தில் உள்ள பல நூல்களில், மகா கவிதை நூல் விருது பெற்றது தமிழ்யிட்ட கட்டளை என்று நான் கருதுகிறேன்
இந்திய புத்தகத்திற்கு மலேசியா விருது வழங்க உள்ளது.
ஆனால் இந்தியாவின் உயரிய விருதான ஞானபீடம் விருது, தமிழ் மொழிக்கு எத்தனை முறை ஞானபீடம் விருது வழங்கியுள்ளது? இந்தியாவின் உயரிய விருதான ஞானபீடம் இதுவரை 58 விருதுகள் வழங்கியுள்ளது.

இந்தி மொழிக்கு 11 முறையும், கன்னட மொழிக்கு 8 முறையும், மலையாளம், வங்காளம் மொழிக்கு 6, உருது மொழிக்கு 5 முறை.
ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு 2 முறை மட்டுமே அகிலன், ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேருக்கு மட்டுமே விருது கொடுத்துள்ளது ஞான பீடம் என்று கவிஞர் வைரமுத்து வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



