Malaysia

மலேசியர்கள் எனும் உணர்வோடு நீடித்து வாழ்வோம்   ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மலேசிய தின வாழ்த்து

கோலாலம்பூர், செப்.16-

மலேசியர்கள் எனும் உணர்வில் நாம் அனைவரும் பெருமிதத்தோடு இந்த மலேசிய தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது மலேசிய தின வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

 

பல்வேறு இனம், மதம், மொழி, கலாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும்,

வேற்றுமையில் ஒற்றுமை எனும் நமது தனித்துவமிக்க வாழ்க்கை முறை, மலேசியர்களின் பண்பாட்டையும், புரிந்துணர்வையும் உலகெங்கும் உரக்கச் செய்கிறது என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 

நமது நாட்டில்தான் திறந்த இல்ல உபசரிப்பு ஒவ்வொரு பெருநாளுக்கும் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து உபசரித்து மகிழ்கிறோம். இந்த ஒன்றிப்பிணைந்த வாழ்க்கையே நமது தனிச்சிறப்பு. நாம் அனைவரும் ஓரே மலேசியர்கள் எனும் உணர்வோடு இங்கு வாழ்ந்து வருகிறோம். அது நீடித்து நிலைத்திருக்க வேண்டும்.

 

மலேசியர்கள் பல்வேறு வாழ்க்கை முறை, கலாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும் உணவு, பண்டிகைகள் என்று வரும்போது தனித்துவமிக்க ஒற்றுமையைக் காண முடிகிறது என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

 

நாட்டின் நல்லிணக்கத்தைப் பேணும் அதே வேளையில், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பண்பும், புரிந்துணர்வும், விட்டுக்கொடுத்தலும் நிறைந்திருப்பது முக்கியம். ஒற்றுமை உணர்வு அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்க வேண்டும்.

 

நம்பிக்கையோடு ஒற்றுமையாய் வாழ்வோம், ஒன்றுபட்டு முன்னேறுவோம். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” எனும் தமிழரின் வாழ்வியல் கூற்று என்றுமே பொய்த்ததில்லை என்று தமது மலேசிய தின வாழ்த்து செய்தியில் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button