
பல மதங்களைச் சேர்ந்த மக்கள், வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்வது சிறப்பு டத்தோஸ்ரீ எம்.சரவணன் மலேசிய தின வாழ்த்து
கோலாலம்பூர், செப்.16-
மலேசியாவின் சுதந்திரம், மூவின மக்களின் ஒன்றுபட்ட முயற்சியின் விளைவு. சுதந்திர பூமி என்ற வகையில்தான் இன்று நாம் மலேசிய தினத்தைக் கொண்டாடி வருகிறோம் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மலேசிய தின வாழ்த்து செய்தியில் கூறினார்.
பல்வேறு இனங்கள் மலாய், சீனர், இந்தியர் மற்றும் பூர்வகுடி சமூகங்கள் இணைந்து வாழும் சுபீட்சமான நாடு மலேசியா. பல இனங்களின் சுவையையும் கலந்த உலகப் புகழ்பெற்ற சமையல் கலை நம்மிடம் உள்ளது என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
பல மதங்களைச் சேர்ந்த மக்கள், வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்கிறோம். இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மலேசியாவில் வாழும் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்..
இந்த நாள், ஒற்றுமை, பண்பாடு, மலேசிய மக்களின் வாழ்வியல் ஆகியவற்றைச் சித்தரிக்கும் சிறப்பான நாளாகும். பல்லின மக்கள் வாழும் மலேசியாவின் தனித்தன்மையையும், பழக்க வழக்கங்கங்களையும் உலக மக்கள் அறிவர்.
ஒற்றுமை, மனிதநேயம், புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் இவையே நம் நாட்டின் வளர்ச்சிக்கும் நலத்திற்கும் அடித்தளமாக விளங்குகின்றன. இதை உணர்ந்து பிரிவின வாதத்திற்கு இடம் கொடுக்காமல் நாம் வாழ வேண்டும்.
உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிய பின் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் இடம், பொருள், ஏவல் அறிந்து நாகரிகத்தை மீறாமல், பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது தனிமனித பொறுப்பாகும்.
அனைவரும் சுபிட்சத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ மலேசிய தின நல்வாழ்த்துகள் என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



