
தியாகத்தின் மறுஉருவம் அன்னையர்கள் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அன்னையர் தின வாழ்த்து
கோலாலம்பூர், மே 12-
‘அன்னை என்னும் ஆலயம்
அன்பில் வந்த காவியம்
கண்ணில் நின்ற ஓவியம்’
தியாகத்தின் மறுஉருவமாய் இருக்கும் அன்னையர்கள் அனைவருக்கும் ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமது இனிய “அன்னையர் தின நல்வாழ்த்துகளை” தெரிவித்துக் கொண்டுள்ளார்.
‘ஆலயத்தின் கருவறையைவிட, சிறந்த இடம் அன்னையின் கருவறை’ என்றார் ஒளவையார். குழந்தையைக் கருவில் சுமக்க ஆரம்பித்தது முதல், மிக மிகக் கவனமாக இருந்து பிடித்ததைத் தள்ளி வைத்து, பிடிக்காததை உண்டு கருவிலேயே பல சிக்கல்களையும், சவால்களையும் சந்திப்பதுதான் தாய்மை. அப்படி ஈன்றெடுக்கும் குழந்தையைத் தாலாட்டி, சீராட்டி வளர்த்து ஆளாக்கி விடும் வரை அன்னையின் தியாகம் ஓய்வதில்லை.
அதன் பின்னும் இறுதிகாலம் வரை தன் பிள்ளையின் வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ச்சியாக அன்பாகவும், ஆதரவாகவும், அரவணைத்தும் வருபவர்தான் தாய்.
இந்தச் சமூகத்தில் ஒரு குடும்பம் மதிப்புடனும், மரியாதையுடனும் திகழ அன்னையின் பங்கு மிக மிக முக்கியம். குடும்பத்தின் நடப்புச் சூழல் உணர்ந்து, சமயோசிதமாக யோசித்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்பவள் பெண்; பெண் உருவில் இருக்கும் அன்னை. வீட்டுக்குள்ளும் வெளியிலும் பலவித சவால்களைச் சந்தித்து, சாதனை படைத்துவருபவர் அன்னை.
அந்த அன்னையை ஆராதிக்க இந்த ஒரு நாள் மட்டும் போதாது. அனுதினமும் அவரைப் போற்ற வேண்டும். அன்னையின்றி நாம் யாருமில்லை,
அன்னையின்றி இவ்வுலகமே இல்லை.
சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைக்க வேண்டுமென, பாரதியார் பெண்களுக்குக் கல்வி முக்கியம் என்பதை அறிவுறுத்தியதன் அடிப்படைக் காரணம் இதுவே. கல்விகற்ற ஒரு பெண் வீட்டையும், குழந்தைகளையும் சரியான முறையில் பராமரிக்க உதவும்.
பொறுப்புள்ள ஆளுமைகளை உருவாக்குவதில் தாயின் அற்பணிப்பு, பங்களிப்பு அளப்பரியது. அதனால், பெண்களின் தனித்தன்மை போற்றிப் பாதுக்காக்கபட வேண்டும்.
இன்றைய தாய்மார்களுக்கான சவால்கள் அதிகம். வீட்டை மட்டுமல்ல, வேலைக்குச் சென்று பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டிய அவசியம் பெண்களுக்கு உண்டு. எனவே பெண்கள் ஒரு தாயாக, குடும்பத் தலைவியாக தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து மேலும் சிறக்க தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான
டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தமது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.



