
இந்திய சமூகத்திற்கு நான்கே மாதங்களில் வெ.130 மில்லியன் ஒதுக்கீடு துணையமைச்சர் டத்தோ ரமணன் தகவல்

நிபோங் திபால், ஜூலை 5-
வணிக ரீதியிலாக இந்திய சமூகத்தின் பொருளாதார உயர்வுக்குக் கைகொடுக்கும் முயற்சியாக, கடந்த நான்கே மாதங்களில் வெ.130 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணம் ராமகிருஷ்ணன் கூறினார்.
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டில் பிரதமத் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் முழு கவனம் செலுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் கடனுதவிகளாக இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக டத்தோ ரமணன் தெரிவித்தார்.
பேங்க் ரக்யாட் வாயிலாக பிரிவ்-ஐ திட்டத்திற்கு வெ.50 மில்லியன், அமானா இக்தியாரின் பெண் திட்டத்திற்கு வெ. 50 மில்லியன், தெக்குன் ஸ்பூபி கோஸ் பிக் திட்டத்திற்கு வெ.30 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 முதல் 2024ஆம் ஆண்டு வரை தெக்குனின் ஸ்பூமி திட்டத்தின் வாயிலாக கூடுதலாக எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் இப்போது மொத்தமாக வெ.60 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்பு அமானா இக்தியாரில் வெ.20 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது கூடுதலாக வெ.50 மில்லியன் என மொத்தம் வெ.70 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இக்கூடுதல் நிதி அனைத்தும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்திய சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை பிரதிப்பலிக்கிறது. மேலும் மேம்பாட்டில் எந்தவொரு சமுதாயமும் விடுப்படக் கூடாது என்பது தான் அரசாங்கத்தின் இலக்காகும். ஆகவே இந்திய சமூகம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
நிபோங் திபால் புக்கிட் ஜாவி கோல்ப் ரிசோர்டில் நடைபெற்ற இந்திய வணிகர்களுக்கான சந்திப்புக் கூட்டத்தில் பேசிய டத்தோ ரமணன் இவ்வாறு கூறினார்.



