
உயிரைப் பறிக்கும் இணையப் பகடிவதையை மஇகா மகளிர் அணி வன்மையாக கண்டிக்கிறது ம.இ.கா மகளிர் தலைவி சரஸ்வதி சூளுரை
கோலாலம்பூர் ஜூலை 8-
இணைய பகடிவதைக்கு பல பெண்கள் பலியாகி வருவது பெரும் வேதனையை அளிக்கிறது என்று ம இகா மகளிர் அணி தலைவி திருமதி சரஸ்வதி நல்லதம்பி தெரிவித்தார்.
இதுபோன்ற துயரமான சம்பவங்கள் நடக்க கூடாது. உயிரைப் பறிக்கும் இணையப் பகடிவதையை ம இகா மகளிர் அணி வன்மையாக கண்டிக்கிறது என்று அவர் சொன்னார்.
நெஞ்சை பதற வைக்கும் இதுபோன்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையை அடைகிறோம். ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் மிகவும் விலைமதிப்பற்றது என்று அவர் சொன்னார்
இணைய பகடிவதைக்கு இளம் வயது பெண்கள் பலியாகி வருவதை தடுத்து நிறுத்த சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். இளம் வயது பெண்கள் உட்பட இளம் தலைமுறையை குறி வைத்து சில கும்பல்கள் பகடிவதையை செய்து வருகிறது.
இளம் வயதினர் நாட்டின் வருங்கால தூண்கள். இந்த நம்பிக்கை நட்சத்திரங்களை நாம் இழக்க கூடாது. இணைய பகடிவதைக்கு இலக்கான இந்திய பெண் ஈஷா எனப்படும் ராஜேஸ்வரி சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தை அமைச்சரவைக்கு கொண்டு செல்வதாக அமைச்சர் பாமி பட்சில் கூறி இருப்பதை வரவேற்கிறோம்.
இணைய பகடிவதைக்கு மேலும் ஒரு உயிர் பலியாகாமல் இருப்பதை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ம இகா தேசிய மகளிர் அணி வலியுறுத்துகிறது என்று சரஸ்வதி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



