
நாட்டில் அதிகமான தமிழ் எழுத்தாளர்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை தொடர்பு அமைச்சு வரவேற்கிறது துணையமைச்சர் தியோ தகவல்
புத்ராஜெயா,ஜூலை 9- மலேசிய தமிழ் இலக்கியத் துறையில் திறமையான புதிய எழுத்தாளர்கள் உருவாக்கும் முயற்சியை தொடர்பு அமைச்சு வரவேற்றுப் பாராட்டுகிறது.
நாட்டில் தமிழ் இலக்கியத்தின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளை அனைத்துலக அரங்கில் அங்கீகரிக்கவும் இதுபோன்ற முயற்சிகள் தொடரப்பட வேண்டும் என்று துணையமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
முன்னதாக, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடர்பு துணையமைச்சர் தியோ நி சிங் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமான சந்திப்பை நடத்தியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இச்சங்கத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, மின்னல் எப்.எம் – உடன் இணைந்து இளம் எழுத்தாளர்களுக்கு பயிற்சியளித்து, சிறுகதை எழுதும் போட்டியை நடத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டது.
கடந்த 2021இல் நடைபெற்ற இப்போபோட்டியில்
200க்கும் மேற்பட்ட எழுத்துப் படிவங்கள் கிடைத்தன. அதில், சிறந்த 24 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மின்னல் எப்.எம்மில் ஒலிபரப்பப்பட்டு, பின்னர் புத்தக வடிவிலும் வெளியிடப்பட்டது.
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் மற்றும் மலேசிய ஒலிபரப்புத் துறைக்கு இடையிலான ஒத்துழைப்பின் அடையாளமாக வெளியிடப்பட்ட இந்த சிறுகதை புத்தகம் துணையமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மலேசியாவில் தமிழ் இலக்கியத்தை தொடர்ந்து அதிகரிக்க மேற்கொள்ளப்படும் தொலைநோக்கு முயற்சிகளை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு. மோகனன் பெருமாள் துணையமைச்சரிடம் பகிர்ந்துக் கொண்டார்.
இச்சந்திப்பில், மலேசிய ஒளிபரப்புத் துறையின் துணை தலைமை இயக்குநர் (வியூகம்), நசருதீன் பின் அப்துல் முத்தலிப், மின்னல் எப்.எம் நிர்வாகி திருமதி. ரோஹினி சுப்ரமணியம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.



