
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ம.இ.கா தலைமையகத்திற்கு வருகை MIED, ஏய்ம்ஸ்ட் குறித்து பாராட்டினார் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தகவல்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,ஜூலை 10-
இந்திய சமுதாய மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள ம.இ.காவின் கீழ் செயல்படும் MIED கல்விக்கழகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பாராட்டியதாக ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.
ம.இ.கா என்ற ஒரு கட்சி இந்திய மாணவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கி அவர்களின் கல்விக்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதை செந்தில் தொண்டமான் பாராட்டியதாக ம.இ.கா தலைமையகத்தில் அவரை வரவேற்பு ம.இ.கா, MIED மற்றும் ஏய்ம்ஸ்ட் குறித்து விளக்கமளித்த பின்னர் தேசம் ஊடகத்திடம் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அழைப்பை ஏற்றுக் கொண்டு மலேசியாவுக்கு குறுகிய கால வருகை மேற்கொண்டுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அதன்பிறகு தான்ஸ்ரீ விக்னேஸ்வரனையும் சந்தித்தார்.
இந்நிலையில் புதன்கிழமை மாலையில் ம.இ.கா தலையைகத்திற்கு வருகை மேற்கொண்ட செந்தில் தொண்டமான் அவர்களை ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் வரவேற்றார். அவருக்கு ம.இ.கா கட்சி குறித்து தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விளக்கமளித்தார்.
செந்தில் தொண்டமான் அவர்களுக்கு MIED மற்றும் ஏய்ம்ஸ்ட் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. MIED தலைமை நிர்வாக அதிகாரி திருமதி மும தாஜ் பேகம் விளக்கமளித்தார். பிறகு MIED அலுவலத்தை சுற்றிப் பார்த்ததாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
செந்தில் தொண்டமான் அவர்களின் இந்த வருகையின் போது ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், ம.இ.கா தேசிய உதவித் தலைவர்களான டத்தோ அசோஜன், டத்தோ முருகையா, டத்தோ நெல்சன், ம.இ.கா தலைமைச்செயலாளர் டத்தோ ஆர்.டி.ராஜா, மத்திய செயலவை உறுப்பினர்கள் டத்தோ ராமலிங்கம், சிவசுப்ரமணியம், கூட்டரசு பிரதேச ம.இ.கா தலைவர் டத்தோ சைமன் ராஜா மற்றும் சதாசிவம் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



