
அரசு நிகழ்வுகளில் இனி இறக்குமதி பழங்கள் இல்லை பிரதமர் அன்வார் அதிரடி அறிவிப்பு
புத்ராஜெயா, ஜூன் 20- அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களில் இனி இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

உள்நாட்டுப் பழத் தொழிலை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் தனது சமூக ஊடகப் பதிவில், இந்த மாற்றத்தின் மூலம் உள்ளூர் விவசாயப் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், இது உள்ளூர் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தில் உள்நாட்டு உற்பத்தியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது.
“அரசு நிகழ்வுகளில் நமது சொந்த நாட்டில் விளைந்த, சிறந்த தரமான பழங்கள் இருக்கும்போது, வெளிநாட்டுப் பழங்களுக்குச் செலவு செய்வது தேவையற்றது,” என்று பிரதமர் அன்வார் சொன்னார்.
இது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளில் ஒன்றாகவும், மக்கள் வரிப்பணத்தின் சிறந்த பயன்பாடாகவும் பார்க்கப்படுகிறது. இந்த முடிவு, மலேசியாவின் விவசாயத் துறையை வலுப்படுத்துவதோடு, உள்நாட்டுப் பழங்களின் நுகர்வை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும் என்றார் பி்ரதமர்.
இது மடானி அரசாங்கத்தின் (Kerajaan Madani) ‘உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு’ என்ற கொள்கையின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



