
சுங்காய் பக்காப் தமிழ்பள்ளியின் கட்டுமானத்தை விரைந்து மேற்கொள்ளுங்கள் கல்வி அமைச்சர் பாட்லினா சிடிக்கிற்கு பினாங்கு மாநில மஇகா தலைவர், டத்தோ ஜெ.தினகரன் வலியுறுத்து
பினாங்கு, மார்ச் 21-
நிபோங் திபால் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சுங்காய் பக்காப் தமிழ்பள்ளியின் கட்டுமானத்தை கல்வி அமைச்சர் பாட்லினா சிடிக் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பினாங்கு மாநில மஇகா தலைவர்,
டத்தோ ஜெ.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த தமிழ்ப்பள்ளி விவகாரம் தொடர்பில் செனட்ணர் லிங்கேஸ்வரன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது இதற்கு பதிலளித்த பாட்லினா, இது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு முடிவுக்கு வந்த பிறகே பள்ளி கட்டடப் பணிகள் கவனிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சரின் பதில் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. இந்த வழக்கு பல ஆண்டுகள் நீடித்தாலோ? அல்லது தோல்வியடைந்த தரப்பு மேல்முறையீடு செய்தாலோ அப்போது, இப்பகுதி மக்களும் மாணவர்களும் பள்ளிக்காகக் காத்திருக்க வேண்டியதுதானா? என்று டத்தோ தினகரன் கேள்வி எழுப்பினார்.
கடந்த 2024ஆம் ஆண்டு சுங்காய் பக்காப் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது, இப்பகுதி மக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வழக்கு முடிந்த பிறகு மட்டுமே பள்ளி கட்டப்படும் என்பதைக் பாட்லீனா கூறவில்லை.
அரசாங்கத்தின் இந்த பதில் ஏற்க முடியாதது. எனவே, நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினரான பாட்லினா இந்த பள்ளியை மிக விரைவாக கட்டுவதற்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். எந்த காரணத்திற்கும் இடமளிக்கக் கூடாது என்று டத்தோ தினகரன் தெளிவுபடுத்தினார்.
இந்த தமிழ்ப்பள்ளி விவகாரம் தொடர்பில் செனட்டர் டாக்டர் லிங்கேஷ்வரன் அண்மையில் நிபோங் தெபால் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சுங்காய் பக்காப் தமிழ் பள்ளியின் விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு கல்வியமைச்சர் பாட்லினா அவ்வாறு பதிலளித்திருந்தார்.
கடந்த தேசிய முன்னனி ஆட்சியில் அதன் தலைமையிலான மத்திய அரசின் காலகட்டத்தில் 3.5 மில்லியன் வெள்ளி அதாவது 35 லட்சம் வெள்ளி பள்ளி கட்டடப் பணிக்காக ஒதுக்கப்பட்டது. 5 லட்சம் வெள்ளி வங்கி வட்டி என மேலும் கணக்கிடப்பட்டது. இதற்காக தேவையான நிலமும் அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில் பள்ளியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் சிலர் அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தி விட்டதோடு, மேலும் அதிக நிதி கோரி அரசு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கை மேற்கொள்காட்டி கல்வி அமைச்சர் நிபோங் திபால், சுங்கை பாக்பாப் தமிழ்ப்பள்ளி வழக்கு முடிந்த பிறகு கட்டப்படும் என்று கல்வியமைச்சர் பாட்லினா சீடிக் கூறியிருந்த்தாக பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஜெ.தினகரன் கூறினார்.



