Malaysia

இந்து ஆலயங்களில் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடுவதற்கு பலவீனமான இந்து சங்கமே காரணம் மலேசிய இந்து சங்கம் என்ன செய்கிறது? சிவ சுப்பிரமணியம் கேள்வி-குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மார்ச் 29;-
மலேசியாவில் இருக்கின்ற இந்து கோயில்கள் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன நிலையில் மலேசிய இந்து சங்கம் வாய் மூடி மௌனம் சாதித்து வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக மஇகா தேசிய ஊடகப்பிரிவு தலைவர் எல். சிவசுப்பிரமணியம் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை நம் சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் பெரும் அவப்பெயரையும் சங்கட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்து ஆலயங்களில் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடுவதற்கு மலேசிய இந்து சங்கத்தின்
பலவீனமே காரணம்! ஆலய பிரச்சினைகளுக்கு
மலேசிய இந்து சங்கம் என்ன செய்கிறது? என்று
சிவசுப்பிரமணியம் கேள்வி எழுப்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள அருள்மிகு தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய பிரச்சனை குறித்து நாடே அறியும்; அதற்கு முன்பு பிரிக்ஃபீட்ஸ்ல் சிவன் ஆலயத்தில் இரண்டு தரப்பினர் நிர்வாக அளவிலும் நிதி அடிப்படையிலும் சண்டையிட்டுக் கொண்டு ஒரு தரப்பார் பக்தர்களை வெளியேற்றிவிட்டு பூட்டுபோட, இன்னொரு தரப்பினர் பூட்டப்பட்டபூட்டை வெட்டிய காட்சிகளை எல்லாம் பார்த்த சமயப் பெரியவர்களும் ஆன்மீக-அரசியல் தலைவர்களும் மிகுந்த வருத்தத்திற்கும் வேதனைக்கும் ஆளாகினர்.

அதற்கு சில காலத்திற்கு முன்பு சுங்கைவே சக்தி ஈஸ்வரி அம்மன் ஆலய நிர்வாகத்தை ஆர்ஓஎஸ் மூலம் அரசாங்கமே எடுத்துக் கொண்டது. அங்கு நிதி மோசடி நடைபெற்றதாகவும் பேசப்பட்டது.

தொடர்ந்து சுங்கைப்பட்டாணி பத்து டுவா அம்மன் ஆலயத்திலும் இதே சிக்கல் ஏற்பட்டு அரசாங்கம் தலையிட்டு ஆலய நிர்வாகத்தை கைப்பற்றுகின்ற அளவுக்கு நிர்வாக தரப்பில் மோதல் ஏற்பட்டது.

இப்படி வரிசையாக நம் ஆலயங்கள் போலீஸ் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் சென்று கோயில் பிரச்சினை சம்பந்தமாக புகார் செய்வதும் வழக்காடுவதுமான நிலைமை தொடர்கிறது.

நாட்டின் கிழக்கு பகுதியில் பகாங் மாநிலத்தில் பிரபலமான அருள்மிகு மரத்தாண்டவர் ஆலயப் பிரச்சனை குறித்து நீதிமன்றமே சலிப்படைந்து இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டது.

நீதிபதிகளே தலையிட்டு பரிந்துரை செய்யும் அளவிற்கு ஆண்டாண்டு காலமாக இந்த ஆலய நிர்வாகம் நீதிமன்றத்தையே சுற்றி வலம் வருகிறது.

இந்த ஆலயத்தில் ஆண்டாண்டு காலமாக இரண்டு நிர்வாக தரப்பினர் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காக சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

மற்ற சமய வழிபாட்டு தலங்களுக்கு இது போன்ற சிக்கல் இல்லாத நிலையில் மலேசியாவில் இந்து சமய ஆலயங்களுக்கு மட்டும் இத்தகைய பிரச்சனை தொடர்கிறது என்றால் இதை எல்லாம் தீர்க்க வேண்டிய மலேசிய இந்து சங்கம் என்ன செய்கிறது என்று சிவசுப்பிரமணியம் வினா தொடுத்துள்ளார்.

இந்த நாட்டின் தாய்க் கட்சியான மஇகாவின் தேசிய ஊடகப் பிரிவுத் தலைவர் என்பதைவிட மலேசிய இந்து சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக இருக்கும் தனக்கு இத்தகைய நிலைமை மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிப்பதாக எல். சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்து சங்கம் சிறப்பாக செயல்படாவிட்டாலும் ஓரளவுக்காவது விழிப்புடன் இருந்தால் நம் ஆலயங்கள் இப்படி காலமெல்லாம் பிரச்சினைய எதிர்கொள்வதை தடுக்க முடியும்.

இப்போதைய
தலைமைமீது பொதுவாக அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக இந்து சமூகத்திற்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை .

பல ஆயிரம் இந்து மக்களை அங்கத்தினராக கொண்டுள்ள மலேசிய இந்து சங்கம், ஆண்டுக் கூட்டம் நடத்தினால் 200-250 பேர்தான் வருகின்றனர் இந்து சங்க தேசிய பேராளர் மாநாடு என்றால் ஆயிரம் கணக்கில் சமய அன்பர்களும் பொதுமக்களும் திரள்வது வாடிக்கை. இப்போது உள்ள தலைமையில் நிலைமை இப்படி ஆகிவிட்டது என்றால் தலைமை அந்த அளவிற்கு பலவீனமாகவும் மோசமாகவும் இருக்கிறது என்பதுதான் உண்மை.

மலேசிய நாட்டின் பாரம்பரிய சமய அமைப்பாள மலேசிய இந்து சங்கத்தை வழிநடத்துவதற்கு புதிய இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும். அவர்கள் தலைமையில் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டு சிறப்பாகவும் சீராகவும் செயல்பட்டால் நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்களுக்கு முறையான தீர்வு காண முடியும் என்று சிவசுப்பிரமணியம் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button