
பேரா மாநில அரசு நிலங்களில் ஆலயங்கள் கட்ட தடையா? சிவநேசன் அறிக்கைக்கு மக்கள் சக்தி கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கண்டனம்
கோலாலம்பூர், ஜூன் 7-
பேராக்கில் அரசு நிலத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆலயங்கள் கட்டுவதைத் தடை செய்யும் அம்மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் அறிக்கைக்கு மக்கள் சக்தி கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கடும் ஆட்சேபத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது சிறுபான்மை மக்களின் உரிமையை பறிக்கும் நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. ஆனால் அது இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதோடு பதட்டங்களை அதிகரிக்கும் என்று
மலேசிய மக்கள் சக்தி கட்சி நம்புவதாக டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் கூறினார்.
பேரா மாநில அரசு நிலங்களில் ஆலயங்கள் கட்ட தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதுவும் சொந்த நிலத்தில் கட்டினாலும் அனுமதி பெற வேண்டுமாம். இது எந்த விதத்தில் நியாயம் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கேள்வி எழுப்பினார்.
பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் இருந்து, இந்தியர்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
அடர்ந்த காடுகளை அழிப்பது, ரப்பர் மரம் நடுவது உட்பட மலாயா பொருளாதாரத்திற்கு இந்தியர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இந்த உண்மை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை யாராலும் புறக்கணிக்க முடியாது என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆணித்தரமாக தெரிவித்தார்.
அந்த வகையில் சிவநேசன் அறிக்கை முற்றிலும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையாக உள்ளது. ஒரு தோட்ட பகுதி மேம்படுத்துவது அல்லது விற்கப்படுவதற்கு முன்பு ஆலயங்கள், பள்ளிகளுக்கு சிறப்பு நிலம் வழங்கப்பட வேண்டும். இது இந்தியர்களின் சேவைகளை நினைவுகூருவதுடன் இந்த நாட்டில் உள்ள இனங்கள், நம்பிக்கைகளின் பன்முகத்தன்மையையும் மதிக்கிறது என்றார் டத்தோஸ்ரீ தனேந்திரன்.
மலேசியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் என்றும் மறுக்கப்படக் கூடாது.
என்பதை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் மாநில அரசாங்கம் ஒரு புதிய சுற்றறிக்கையை வரைய வேண்டும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.



