
ஜசெக மக்களின் தீர்ப்பை மதிக்கிறது, புனரமைத்து முன்னேறிச் செல்லும் தலைவர் கோபிந்த் சிங் அறிவிப்பு
தேசம் செய்திகள்
கோலாலம்பூர் ஆக. 2- நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் 16ஆவது மாநிலத் தேர்தலில் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ள மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ கூறினார். இந்த முடிவை நாங்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம். பக்காத்தான் ஹரப்பான் மற்றும் ஜசெகவுக்கு ஆதரவளித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். இந்தத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் தங்களால் இயன்ற அனைத்தையும் வழங்கிய எங்கள் வேட்பாளர்கள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் மனதாரப் பாராட்டப்படுகிறது. சென்னாவில் கடும் போட்டிக்குப் பிறகு, நமது பொதுச் செயலாளர் அந்தோனி லோக் அடைந்த தோல்வியையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கோபிந்த் சிங் தெரிவித்தார். லோக் பல ஆண்டுகளாக கட்சிக்கும் மக்களுக்கும் சிறப்பான சேவையாற்றியுள்ளார், மேலும் அவர் தொடர்ந்து அவ்வாறே செய்வார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஜசெக இதற்கு முன்பும் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. வாக்காளர்களிடமிருந்து வரும் செய்தி தெளிவாக உள்ளது. நாங்கள் முடிவுகளை முழுமையாக மதிப்பீடு செய்து, மக்களின் கவலைகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் கவனமாகக் கேட்டு, அவர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் மீண்டும் பெற கடுமையாக உழைப்போம். மக்களால் வழங்கப்பட்ட ஆணையை நாங்கள் மதிக்கிறோம், மேலும் அடுத்த நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தை அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள். அவர்கள் பொறுப்புடன் ஆட்சி செய்வார்கள் என்றும், எப்போதும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பார்கள் என்றும் நம்புகிறோம் என்று டிஜிட்டல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டுள்ளார்.



