
ரினி தமிழ்ப்பள்ளியின் பாலர்பள்ளி குழு விளையாட்டு போட்டியும் பெற்றோர் தினமும் களைகட்டியது
ஜொகூர்,மே 8-
ரினி தமிழ்ப்பள்ளியின் பாலர்பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டும் குடும்ப தினமும் பள்ளியின் திறந்த மண்டபத்தில் கடந்த புதன்கிழமை
மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
இன்றைய நிகழ்வில் பாலர்பள்ளி காலை, மாலை பிரிவினைச் சேர்ந்த கம்பர் மற்றும் பாரதி வகுப்பு இளம் சிட்டுகள் விளையாட்டுகளில் தங்கள் விவேகத்தைக் காட்டினர்.
பிள்ளைகளின் விளையாட்டுத் திறமையைக் காணும் பொருட்டு ஆர்வமுடன் இன்றைய நிகழ்விற்கு வருகையளித்த பெற்றோர்களுக்குப் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.சு.தமிழ்ச்செல்வி அவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
ஜொகூர் மாநில பாலர் பள்ளிகள், ஆரம்பப்பள்ளிகளுக்கான உதவி இயக்குநரும் மற்றும் ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளருமான திருவாளர் இரா.இரவிச்சந்திரன் அவர்கள் மாணவர்கள் இது போன்ற விளையாட்டு நிகழ்வுகளில் ஆர்வம் காட்டுவதன் வழி சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்க முடியும் எனக் கூறியதோடு. செயற்கைத்தீபச்சுடரை ஒளியூட்டி அதிகாரப்பூர்வமாக விளையாட்டுப் போட்டியினைத் தொடக்கி வைத்தார்.

இம்மாணவர்கள் 50 மீட்டர் ஓட்டத்திலும் மற்றும் குழு விளையாட்டுகளிலும் சற்றும் சளைக்காது ஆர்வமுடன் தங்களின் திறமைகளைக் காட்டி சிறப்பாக விளையாடினர்.
பாலர்பள்ளியின் விளையாட்டுப் போட்டியின் வெற்றியாளராக நீல இல்லம் தடம் பதித்தது. இன்றைய நிகழ்வில் பெற்றோர்களுக்கான குடும்ப தினமும் இடம்பெற்ற வேளையில் ’மெக்டோனல்’ சார்பில் மாணவர்களுக்கு உணவுகளும் வழங்கப்பட்டது.
மேலும், தொழிலதிபர் திருவாளர் தினகரன் அவர்கள் இப்போட்டி விளையாட்டிற்காக நன்கொடை வழங்கினார்.
இன்றைய பாலர்பள்ளியின் குழு விளையாட்டும் குடும்ப தினமும் நடைபெற தூணாய் நின்ற துணைத்தலைமையாசிரியர்கள், பாலர்பள்ளி ஆசிரியர்கள், பாலர்பள்ளி உதவியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவர் திரு.பிரகாஷ் மற்றும் அவர்தம் செயலவையினர் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தலைமையாசிரியர் அவர்கள் நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.




