
AI போட்டியில் மலேசியாவை முன்னிறுத்தும் MMU: புதிய செயற்கை நுண்ணறிவுப் புலம் திறப்பு
சைபர்ஜெயா, ஆக.19- மலேசியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) திறனைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு முக்கியமான நிகழ்வாக, மல்டிமீடியா பல்கலைக்கழகம் (MMU) தனது புதிய செயற்கை நுண்ணறிவு மற்றும் பொறியியல் புலத்தை (FAIE) கோலாகலமாகத் தொடங்கி வைத்துள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த நிகழ்வைச் சிறப்பித்ததுடன், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கும் (MCMC) MMUக்கும் இடையே AI உருமாற்ற மையம் (AIX) தொடர்பான ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
சைபர்ஜெயாவில் உள்ள MMU வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, AI கோட்பாடுகளில் மாணவர்களை வலுப்படுத்துவதுடன், நிஜ உலகப் பிரச்சினைகளைத் தீர்க்க AI தீர்வுகளை வடிவமைக்கவும், செயல்படுத்தவும், இணைக்கவும் தேவையான நடைமுறைத் திறன்களையும் அவர்களுக்கு வழங்குவதில் FAIE இன் முக்கிய கவனத்தை வெளிப்படுத்துகிறது.
MMU இன் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் மாஸ்லிஹாம் முகமது சூட் இது பற்றிப் பேசுகையில், “FAIEஐத் தொடங்கியதன் மூலம், AIமூலம் செயல்படும் உலகிற்காக மாணவர்களைத் தயார்படுத்த எங்கள் திட்டங்களை மாற்றி அமைத்துள்ளோம். பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவில் இளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்)மற்றும் ஸ்மார்ட் ரோபோட்டிக்ஸில் இளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்) போன்ற சிறப்புப் படிப்புகளுடன், ஆராய்ச்சி சார்ந்த முதுகலை மற்றும் Ph.D திட்டங்களையும் நாங்கள் வழங்குகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த புதிய புலத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக,MCMCஇன் முக்கிய திட்டமான AI உருமாற்ற மையம் (AIX) அமைக்கப்பட்டுள்ளது. MCMCஆல் RM32 மில்லியன் மற்றும் MMUஆல் RM5 மில்லியன் என மொத்தம் RM37 மில்லியன் கூட்டு முதலீட்டுடன், AIX 13 நவீன ஆய்வகங்களைக் கொண்டிருக்கும்.
இது புதுமை, அரசு-தொழில்-கல்வி ஒத்துழைப்பு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) வளர்ச்சி மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றிற்கான தேசிய மையமாகச் செயல்படும்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது உரையில், AI நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய சக்தி என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் (NAIO) நிறுவுதல் மற்றும் AI தொழில்நுட்ப வரைபடம் 2026-2030 ஐத் தொடங்குதல் போன்ற அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்களுக்கு அடிப்படை AI அறிவை வழங்கிய மக்களுக்கான AI’ திட்டம் மற்றும் ‘AI நிர்வாகம் மற்றும் நெறிமுறைகள் (AIGE) குறியீடு’ ஆகியவை AIவளர்ச்சிக்கான மலேசியாவின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
டெலிகாம் மலேசியாவின் (TM) குழு தலைமை நிர்வாக அதிகாரி அமர் ஹுஸைமி எம்டி டெரிஸ், TM இன் ‘ஹைப்பர்கனெக்டட் டேட்டா சென்டர்’ மற்றும் GPU-as-a-Service’ போன்ற AI வசதிகளை எடுத்துரைத்து, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிஜிட்டல் வல்லரசாக மாறும் TM இன் லட்சியத்திற்கு FAIE உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்த முக்கிய நிகழ்வில், FAIE இன் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி திறன்களை வலுப்படுத்தும் நோக்கில், AIX மூலம் MMU மற்றும் MCMC இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. AIXஆனது மலேசியாவை AI திறமை, புதுமை மற்றும் தொழில் சார்ந்த தீர்வுகளில் ஒரு பிராந்திய சக்தியாக நிலைநிறுத்த MCMC இன் ஒரு முக்கிய தேசிய முதலீட்டைக் குறிக்கிறது.
AIX இன் மையத்தில் MCMC இன்டெலிஜென்ஸ் சேர் உள்ளது, இது நீண்டகால வழிகாட்டுதல், நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய போட்டியை இயக்குவதற்கான ஒரு முக்கிய தலைமைப் பதவியாகும்.

பிரதமர் MMU மாணவர்களுடன் கலந்துரையாடி, நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதில் அவர்களுக்கு ஊக்கமளித்த ‘TEMU ANWAR’அமர்வுடன் இந்த நிகழ்வு நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



