
நாயை அடித்துக் கொன்றதற்காக ஆடவருக்கு 20,000 ஆயிரம் வெள்ளி அபராதம்!
ஈப்போ,அக்.1- இரண்டு வாரங்களுக்கு முன்பு நாயை அடித்துக் கொன்றதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 20,000 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.23 வயதான குற்றம் சாட்டப்பட்ட எம். தேனிஷ்குமார் அபராதம் செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைத்தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி அனிஸ் ஹனினி அப்துல்லா உத்தரவிட்டார். குற்றச்சாட்டின்படி, மெக்கானிக்காக பணிபுரியும் அவர், ஒரு ஆண் நாயை இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். கடந்த மாதம் செப்டம்பர் 18 ஆம் தேதி இரவு 10.30 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை ஈப்போவின் தாமான் ஆர்கிட் எனும் இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்தச் செயல் புரிந்துள்ளார். விலங்குகள் நலச் சட்டம் 2015 (சட்டம் 722) பிரிவு 29(1)(a) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ரி்20,000 குறையாத அபராதமும் ரி்.100,000 க்கு மிகாமலும் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மிகாமலும் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வகை செய்கிறது. துணை அரசு வழக்கறிஞர் அமல் அசிமா அப்த். கோஹர் வழக்கில் ஆஐரானார்.குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகவில்லை. திங்களன்று, ஈப்போவின் தாமான் ஆர்கிடில் உள்ள ஒரு வீட்டில் இரும்பு கம்பியால் நாயை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மலேசிய விலங்கு அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு நிமிடம் மற்றும் 31 வினாடிகள் கொண்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமது தெரிவித்தார்.



