வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் இளம், புதிய ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள் வெற்றிவேலன் வலியுறுத்து
கோலாலம்பூர்,ஜூலை 22-
நாடு தழுவிய நிலையில் பள்ளிகளில் குறிப்பாக தமிழ்பள்ளிகளில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண புதிய, இளம் ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்று தமிழ்க்கல்வி இயக்கங்களின் கூட்டாண்மையின் ஒருங்கிணைப்பாளர்
ம. வெற்றிவேலன்
கூறினார்.
ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் கற்பிக்கும் வாய்ப்பு வழங்க முன்வந்துள்ள
கல்வி அமைச்சர் ஃபட்லினா சிட்டிகின் அறிக்கையை வரவேற்கிறோம். ஆனால், வேலைக்கு காத்திருக்கும் இளம் ஆசிரியர்களுக்கு முதலில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வெற்றிவேலன் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் ஆசிரியர் பணியில் சேர்த்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள அமைச்சரின் அறிக்கையை வரவேற்கிறோம்.
இந்த அறிக்கையின்படி, UPSI (45 பட்டதாரி ஆசிரியர்கள்), UM (15 பட்டதாரி ஆசிரியர்கள்) மற்றும் பிற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்த பல ஆசிரியர்களை ஏற்றுக் கொள்வதைத் தீவிரமாகப் பரிசீலிக்குமாறு அமைச்சர் ஃபத்லினா சிட்டிக்கை வெற்றிவேலன் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆசிரியர்கள் தற்போது கல்வியமைச்சின் நேர்காணல் மற்றும் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
பல SJKT, SK, SMK பள்ளிகள் தொடர்ந்து தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன. இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பது நமது மாணவர்களின் தொடர்ச்சியான தரமான கல்விக்கு மேன்மையளிக்கும் என்று வெற்றிவேலன் சொன்னார்.
முதுமையான குறைந்த ஆற்றலுடைய ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக்காட்டிலும் இளமையான ICT கற்ற ஆற்றலும் துடிப்பும் மிக்க சுறுசுறுப்பான வேலைக்குக் காத்திருக்கும் ஆசிரியர்களைப் பணிக்கு சேர்ப்பதே சிறந்த வழியாகும்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஏறக்குறைய 8,000 ஊதியம் வழங்குவதை விட இளமையான புதிய ஆசிரியர்களுக்கு 2,800 மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதை வெற்றிவேலன் சுட்டிக்காட்டினார்.
இதன் வழி அரசாங்கம் ஊதியத்தை மிச்சப்படுத்தும் மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியரின் 8,000 ஊதியத்திற்குப் பதிலாக 3 இளமையான ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி கல்வித் தரத்தையும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தரலாம் என்று வெற்றிவேலன் குறிப்பிட்டுள்ளார்.



