
மலேசிய கலைஞர்களுடன் ஒன்றிணைந்து இயல் இசை நாடகம் கலவையுடன் மேடை நாடகங்கள் அரங்கேற்றம் – ஓய்.ஜி. மதுவந்தி
ஈப்போ, நவ.16- மலேசிய திருநாட்டில் இங்குள்ள உள்ளூர் கலைஞர்களுடன் ஒன்றிணைந்து மேடை நாடகங்களை படைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறும் என்று நம்புவதாக பிரபல நகைச்சுவை நடிகர் ஓய்.ஜி.மகேந்திரனின் புதல்வி ஓய்.ஜி. மதுவந்தி இங்குள்ள பிரபல உணவகத்தில் மேடை நாடக ஒருங்கிணைப்பாளரும், கோப்பெங் மஇகா தொகுதித்தலைவர் ஆர்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் இதனை அவர் கூறினார்.
எங்கள் குடும்பம் மேடை நாடகத்தை தயாரித்து படைப்பதில் வல்லமையும், இலட்சியமும் கொண்டவர்கள். எங்கள் தாத்தா ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மேடை நாடக குழுவில் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் தாயாரும் அவரது சகோதரியும் முதல் முதலாக நடிக்க தொடங்கியவர்கள். அதன் பின், என் தந்தை இப்பொழுது நானும் என் குழுவினரும் இதனைத் தொடர்ந்து செய்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஈப்போவில் எம்.ஜி.ஆர். நிகழ்வான காலத்தை வென்றவன் நிகழ்வை பி.பாலையா ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக நடத்தி வருகின்றார்.அவரின் தலைமையில் அடுத்தாண்டு மலேசியாவிலுள்ள அனைத்து பெரிய நகர்களில் இந்த மேடை நாடகத்தை அரங்கேற்றம் செய்ய நாங்கள் தயாராகவுள்ளோம். அதே வேளையில் மலேசிய நாட்டு கலைஞர்களுடன் ஒன்றிணைந்து இந்த மேடை நாடகத்தை படைக்க ஆவலாக உள்ளது. இதில் இயல்,இசை, நாடகம் கலந்த படைப்பினை நாங்க வழங்கவுள்ளோம் என்று அவர் நம்பிக் கையுடன் கூறினார்.
நான் இதுவரை பல திரைப்படங்கள் மற்றும் சீரியலில் நடித்து வருகிறேன். அதுபோல் நடிகர் ஈஸ்வர் சுமார் 100 படங்களுக்கும் மேல் நடித்ததோடு சீரியலிலும் நடித்து வருகிறார். நாங்கள் இதுவரை 800 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை படைத்துள்ளோம் என்று அவர் கோடிக்காட்டினார்
இச்சந்திப்பின் நிறைவுவிழாவில், நடிகை ஓய்.ஜி.மதுவந்தி மற்றும் நடிகர் ஈஸ்வர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்வித்தார் கீதாமலர் மகேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர் பி.பாலையா. இந்நிகழ்வில் சமூகநல மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை இயக்க தலைவர் பா. யுவராஜன், ஈப்போ பாராட் நாடாளுமன்ற சிறப்பு அதிகாரி மு. இந்திரன் மற்றும் உள்ளூர் கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர்.



