
இந்திய செட்டல்மெனில்( டேசா செங்காட்) புதிய பொலிவுடன் பாலர்பள்ளியும், சமூக மண்டபமும் திறந்து வைக்கப்பட்டது.
பத்துகாஜா, ஜன.12- இந்தியன் செட்டல்மென்( டேசா செங்காட்) கிராமத்தில் 25 மாணவர்கள் பயிலக்கூடிய பாலர்பள்ளி மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
ஆகையால், இவ்வாண்டு முதல் பாலர்பள்ளி மாணவர்கள் இங்கு பயிலலாம். அத்துடன், பாலர்பள்ளிக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட ஒரு சமூக மண்டபத்தை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும்படி பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் இந்த பாலர்பள்ளி கட்டடத்தை அதிகாரப்பூர்வமாக திறந்த வைத்தபோது இவ்வாறு கூறினார்.
இங்கு பாலர்பள்ளி பல்லாண்டு காலமாக வாடகை செலுத்தி வீடொன்றில் செயல்பட்டு வந்துள்ளது. இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் 95 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கி இந்த கட்டடத்தை மறுசீரமைப்பு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, இப்பாலர்பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ள சமூக மண்டபமும் பொதுமக்களின் தேவைக்காக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஆகையால், இனிவரும் காலங்களில் இங்குள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
முதல் கட்டமாக இம்மண்டபத்தில் பி40 குடும்பத்திற்கு உணவுப்பொருட்கள் கூடைகள் மற்றும் அரிசி வழங்கி உதவிகள் செய்யப்பட்டன. அத்துடன், இம்மாத இறுதியில் சீனப் புத்தாண்டை கொண்டாடும் சீன அன்பர்களுக்கும் உணவுப்பொருட்கள் கூடைகள் வழங்கி உதவியதாக அவர் தெரிவித்தார்.
இந்த இந்தியன் செட்டல்மென் கிராமத்து தலைவர் ஷா ரவீன் மற்றும் ருக்குன் தெத்தாங்கா தலைவர் ரகு அவுளி அவர்களது நிர்வாகம் திறம்பட செயலாற்றியதால் இந்த மறுசீரமைப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று இந்த பாலர்பள்ளி திறக்கப்பட்டதாக அவர் பாராட்டை தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாண்டில் புதிய மாற்றம், முழுமையான வசதிகள் கொண்டு இந்த பாலர்பள்ளி திறக்கப்படவுள்ளது. இதற்கு முழுமையான நிதியுதவி வழங்கிய பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமாருக்கு இங்குள்ள மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொண்டார் ருக்குன் தெத்தாங்கா தலைவர் ரகு அவுளி.

இந்நிகழ்வில் பத்துகாஜா மாவட்ட போலீஸ்படை தலைவரின் பிரதிநிதி துவான் ஏஎஸ்பி முகமட் ஹாபிக் அப்துல் மஜிட், பத்துகாஜா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜெயகுமரன் ஜெயபாலன், ஜசெக பிரமுகர்கள், கிராமத்து மக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



