
கடந்தாண்டு இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் பெரும் பயனாக இருந்தது துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நம்பிக்கை
சுங்கைபூலோ,ஜன.14-
இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக தொழில் முனைவர்களுக்கு கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட 7 திட்டங்கள் பெரும் பயனாக இருந்ததாக தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
இந்த 2025ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்திற்கான இத்திட்டங்கள் தொடருமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் கண்டிப்பாக இத்திட்டங்கள் அனைத்தும் தொடரும் என்று டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
கடந்தாண்டு மக்கள் நலனுக்காக 7 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.
இவ்வாண்டும் கிட்டத்தட்ட 10 திட்டங்கள் அமல்படுத்தப்படலாம். இத்திட்டங்களை அறிவிப்பதுடன் நிதி ஒதுக்குவது முக்கியம் அல்ல. மாறாக அத்திட்டங்கள் அனைத்தும் சமுதாயத்தை சென்றடைய வேண்டும். அது தான் தங்களின் இலக்கு என்று டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறையின் துணையமைச்சராக பதவி ஏற்றது முதல் சமுதாயத்திற்காக 7 திட்டங்களை அறிவித்தேன். இத்திட்டங்கள் அனைத்தும் முறையாக அமல்படுத்தப்படும்.
2025ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 10 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று டத்தோஸ்ரீ ரமணன் சொன்னார்.
சுங்கைபூலோவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் டத்தோஸ்ரீ ரமணன் கலந்து கொண்டார். இந்த பொங்கல் விழாவில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், துணையமைச்சரின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



