Malaysia

பாதுகாப்பான சமூக ஊடகப் பயன்பாடு கோலாலம்பூர் பிரகடனம் அக்டோபரில் அங்கீகாரம் பெறுகிறது

கோலாலம்பூர்,ஜூன் 3-

சமூக வலைத்தளங்களைச் பாதுகாப்பானதாகவும், பொறுப்புணர்வுடனும் பயன்படுத்தும் நோக்கில் மலேசியாவால் முன்னெடுக்கப்பட்ட ‘கோலாலம்பூர் பிரகடனம்’, எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சிமாநாட்டில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இப்பிரகடனத்தின் வரைவு, கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்ற 17வது ஆசியான் தகவல் துறை அமைச்சர்களின் மாநாட்டில் (AMRI) உறுதி செய்யப்பட்டது.

தோக்கியோவில் நடந்த ஆசிய-பசிபிக் தொலைத்தொடர்பு அமைச்சர் மாநாட்டில் (APT-MM) தமது உரையை நிகழ்த்திய பின்னர், தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் இச்செய்தியை வெளியிட்டார்.

இந்த ஆண்டு ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் மலேசியா, தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் சமூக வலைத்தளங்களைச் பாதுகாப்பானதும், பொறுப்புணர்வு மிக்கதுமான முறையில் பயன்படுத்துவது தொடர்பான ‘கோலாலம்பூர் பிரகடனத்தை’த் தொடங்கி வழிநடத்தியுள்ளது,” என அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் எடுத்துரைத்தார்.

இப்பிரகடனத்தின் வாயிலாக, ஆசியான் உறுப்பு நாடுகள் தமது குடிமக்கள் இணையத்தில் பொறுப்புணர்வோடு நடந்துகொள்வதை ஊக்குவிக்கும் கூட்டு முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், உறுப்பு நாடுகளின் தனித்துவமான இணையப் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நடைமுறைச் சாத்தியமான வளங்களையும், சிறந்த வழிமுறைகளையும் திரட்டும் நோக்குடன் ‘ஆசியான் இணையப் பாதுகாப்புத் தொகுப்பை’ (ASEAN Kit for Online Safety) நிறுவுவது குறித்தும் மலேசியா ஆராய்ந்து வருவதாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.

பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, நம்பகத்தன்மைமிக்க டிஜிட்டல் சூழலை உருவாக்குவதில் பிராந்தியப் பங்காளிகளுடன் இணைந்து செயல்பட மலேசியா உறுதியுடன் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

“ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை, மற்றும் தொடர்ச்சியான திறன் மேம்பாடு ஆகியவற்றின் வாயிலாக, டிஜிட்டல் யுகத்தில் எவரும் பின்தங்காமல் இருப்பதை நாம் உறுதிசெய்ய முடியும்,” என்று அவர் உறுதியளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button