
பிகேஆர் தேர்தல் பி.பிரபாகரன் தோல்வி
கோலாலம்பூர்,ஏப்.20-
நாட்டை ஆளுகின்ற மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை வகிக்கும் மக்கள் நீதிக்கட்சியில் (PKR) இது தேர்தல் காலமாகும்.
அடுத்த மாதம் தேசிய அளவிலான உயர்மட்ட பதவிகளுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தற்பொழுது தொகுதி அளவில் நாடு முழுவதும் மாநில வாரியாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் நாட்டின் மையப் பகுதியான கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்திற்கும் தேர்தல் நடைபெற்றது.
இதில் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப. பிரபாகரன் களம் கண்ட பிகேஆர் பத்து தொகுதிக்கான தேர்தல் முடிவு குறித்து மிகவும் ஆர்வமாகவும் பரபரப்பாகவும் எதிர்பார்க்கப்பட்டது.
காரணம் ப. பிரபாகரன் இந்தத் தொகுதியின் இரண்டாம் தவணை நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாமல் மலேசிய இந்திய சமுதாய உருமாற்றப் பிரிவான மித்ராவின் தலைமை நிருவாகியாகவும் இருப்பதால்தான்;
கட்சித் தேர்தலில் வெற்றி கொள்வது அவரின் தொடர் அரசியல் பயணத்திற்கு அடித்தளமாக அமையும் என்பதுடன் அடுத்த 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிக்கான உறுதிபாட்டையும் இது வரையறுக்கும்.
இத்தகைய சூழலில், ஏற்கனவே பதது தொகுதியின் தலைவராக இருந்த பிரபாகரன், இந்த தவணைக்கும் அதைத் தக்க வைத்துக் கொள்ளும் உறுதிப்பாட்டில் களம் இறங்கினார்
தேர்தலுக்கான முடிவு இணையவழி அறிவிக்கப்பட்ட பொழுது, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹஷிக் அலியிடம் 153 வாக்குகள் வேறுபாட்டில் அவர்தோல்வியைத் தழுவியிருந்தார்.
பி.கே.ஆர் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச அளவில் மட்டுமல்ல: தேசிய அளவில் இந்திய சமுதாயத்தில் இதுகுறித்து பரவலாக பேசப்படுகிறது.



