
எஸ்பிஎம் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ம.இ.கா. கல்விக் குழு ஆலோசனை வழங்க தயாராக உள்ளது டத்தோ ரங்கநாதன் உறுதி
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
பெட்டாலிங் ஜெயா,ஏப்.25-
எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உட்பட மற்ற அனைத்து மாணவர்களின் கல்விப் பயணத்தில் மஇகா துணை நிற்கும் என்று மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய கல்விக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற மேலவை மேநாள் உறுப்பினருமான டத்தோ நெல்சன் ரங்கநாதன் உறுதியளித்துள்ளார்.
கடந்த 2024 எஸ்பிஎம் தேர்வில் சிறந்த அடைவு நிலையுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் டத்தோ நெல்சன் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டம் ஒன்றை டத்தோ நெல்சன் நடத்திய போது அவ்வாறு தெரிவித்தார்.
எஸ் பி எம் தேர்வில் அமர்ந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் எதிர்கால கல்விப் பயணம் குறித்து ஒவ்வோர் இலக்கைக் கொண்டிருப்பார்கள்.
எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-இல், வெளியான நிலையில ஒருவேளை அதற்கு இசைவாக இல்லாமல் இருக்கலாம்.
அல்லது குறைந்த தகுதியுடன் தேர்ச்சி அடைந்திருக்கலாம்.
மலேசிய கல்வித்துறையில் பரந்த வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை மாணவர்கள் முதலில் உணர்ந்து, அதற்கு ஏற்ப உங்களின் கல்விப் பயணத்தையும் எதிர்கால வாழ்வையும் திட்டமிடலாம்.
குறிப்பிடத்தக்க மருத்துவம், பொறியியல், சட்டம் தவிர்த்து ஏராளமான துறைகள் இருக்கின்றன என்பதால் தங்களின் கல்விப் பயணத்தில் சோர்ந்துவிடாமல் தங்களின் ஆற்றல் இலக்கு, பொருளாதார சூழல் இவற்றுக்கு ஏற்ப தங்களின் கல்விப் பயணத்தைத் தொடர வேண்டும் என்றும் இதன் தொடர்பில் மஇகா எல்லா வகையிலும் இந்திய சமுதாய மாணவர்களுக்கு துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
சில மாணவர்கள் நேரடியாக உயர்கல்வி க்காக பல்கலைக்கழகத்தில் நுழையலாம்; இன்னும் ஒரு சில அடிப்படை கல்வியான ‘ஃபவுண்டேஷன்’; இன்னும் சிலர் டிப்ளொமா என்னும் பட்டயக் கல்வி என்றெல்லாம் தங்களின் தகுதி, விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளலாம்
எல்லாவற்றுக்கும் மேலாக அரசாங்கம் தற்போது ‘திவெட்’ கல்விமீது மாணவர்களை அதிகமாக ஊக்குவிக்கின்றது.
தொழில் திறனை அளிக்கக்கூடிய இந்தக் கல்வியிலும் மாணவர்கள் இணைந்து தொழில்நுட்ப ஆற்றலைப் பெற்று அதன்வழியும் தங்கள் வாழ்க்கையை வடிவமைக்கலாம்.
அதைவேளை, எஸ் பி எம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மஇகா கல்விக் குழுவுடன் தொடர்பு கொள்வதற்காக இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் க்யூ ஆர் கோட்-ஐ அறிமுகம் செய்தனர்.
எஸ் பி எம் தேர்வில் வெற்றி பெற்ற இந்திய சமுதாய மாணவர்கள் அனைவரும் இந்த கியூ ஆர் கோட்-மூலம் பதிவு செய்து அதன்மூலம் இணைய விண்ணப்ப படிவத்தை (Google application form) நிறைவு செய்தால், அதை அன்றாடம் கவனித்து வருகின்ற ம.இ.கா. கல்விக் குழு பொறுப்பாளர்கள் ஒவ்வொரு மாணவரின் எஸ்பிஎம் தேர்வு முடிவு, அவர்களுடைய எதிர்காலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து அதன் அடிப்படையில் உடனுக்குடன் தொடர்பு கொள்வார்கள் என்றும் டத்தோ நெல்சன் தெரிவித்தார்.
நம் சமுதாய மாணவர்களுக்கு ம.இ.கா. கல்விக் குழு மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புவது, எந்த வகையிலும் சோர்ந்து விடாதீர்கள்; மாணவர்களின் ஆர்வம், ஆற்றல், மற்றும் எஸ் பி எம் தேர்வு முடிவிற்கு ஏற்ற கல்விப் பயணத்தை வடிவமைக்க ம.இ.கா. கல்விக் குழு எந்நாளும் தயாராக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய டத்தோ நெல்சன் ரங்கநாதன், ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட கல்வியேத் தொடர ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்க் கூட்டத்தில் ம.இ.கா. தேசிய ஊடகப்பிரிவு தலைவர் எல் சுப்பிரமணியம், கல்விக் குழு விக்னேஸ்வரி பாபுஜி, சசி, சதாசிவம் உள்ளிட்டரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



