
பெண்ணின் தங்கச் சங்கிலியைப் பறித்த ஹூசேன் ஐயாசாமிக்கு ஐந்தாண்டுச் சிறை!
கோலாலம்பூர், ஏப். 29- உணவகம் ஒன்றில் கடந்த வாரம் பெண்மணியின் தங்கச் சங்கிலியைத் திருடிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
ஹூசேன் ஐயசாமி (வயது 39) என்ற அந்த இந்திய முஸ்லீம் ஆடவருக்கு இத்தண்டனையை வழங்கிய
நீதிபதி இஸ்ரலிசாம் சனுசி, கைது செய்யப்பட்ட தினமான ஏப்ரல் 25 ஆம் தேதியிலிருந்து சிறைத்தண்டனை அமலுக்கு வருவதாகக் கூறினார்.
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி நள்ளிரவு 12.38 மணியளவில் கெப்போங்கில் உள்ள தாமான் முத்தியாரா ஃபடாசோனில் உள்ள ஒரு உணவகத்தில் 47 வயதான பெண்ணின் தங்க நெக்லஸைத் திருடியதை ஒரு குழந்தைக்கு தந்தையான அவ்வாடவர் ஒப்புக்கொண்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 392 இன் கீழ் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
வழக்கின் உண்மைகளின்படி, உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டப்பட்டவர் அணுகி சிகிரெட் கேட்டுள்ளார். ஆனால் அப்பெண் சிகரெட் கொடுக்கவில்லை.
பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் உணவகத்தை விட்டு வெளியேறினார். ஆனால் சிறிது நேரத்தில் பாதிக்கப்பட்டவரை நோக்கி ஒடி வந்த சந்தேக நபர் அவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினார். எனினும் பொதுமக்களும் ரோந்து பணியிலிருந்த போலீசாரும் அவரை வெற்றிகரமாகப் மடக்கிப் பிடித்தனர்.



