
ரப்பர் தோட்ட தொழிலாளர்கள். மறக்க முடியாத பொருளாதார சிற்பிகள்
பினாங்கு,ஏப்.30-
மலேசியாவில் தொழிலாளர் தினம் என்று உச்சரித்தால், அந்த சொல்லுக்கு பெருமையானவர்கள் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் தான்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு, முதுகெலும்பாக அமைந்தவர்கள் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் என மலேசிய சரித்திரல் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆராய்ச்சி, கல்வி பிரிவு அதிகாரி என் வி சுப்பாராவ் சுட்டிகாட்டினார்.

வேறு எந்த துறையினரும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, ரப்பர் தோட்ட தொழிலாளர்களைப் போல், பணி புரிந்தது கிடையாது.
காட்டை அழித்து, அதனை ரப்பர் தோட்டங்களாக உருவாக்கி, உரமிட்டு, ரப்பர் பாலை தோலில் சுமந்து, பல நிறுவனங்களை செல்வாக்கு மிக்க நிறுவனங்களாகவும், பல முதலாளிகளை, பணக்காரர்களாக உருவாக்கிய பெருமை மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கே போய்ச்சேரும் என்றார் சுப்பாராவ்.

மழை, வெயில் மற்றும் பனி என்று பாராது, வேர்வை சிந்தி, உழைத்து ஏழை சமுதாயமாகவே வாழ்ந்து சரித்திரம் படைத்தவர்கள் இவர்கள்.
நாட்டின் மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும், தங்களையே அர்ப்பணித்த அந்த தியாக ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் இந்த தொழிலாளர் தினத்தன்று நினைத்து பார்த்து போற்றக் கூடியவர்கள்.

அந்த ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் இல்லையேல் நாம் இல்லை. நாம் உபயோகிக்கும் பல பொருட்கள், ரப்பர் பொருட்கள் என்பதை நாம் மறக்க கூடாது என்று என் வி சுப்பாராவ் கூறினார்.



