
பிரதமர் அறிவித்த தேசிய ஊடக நிதி தொழில் துறை மேம்பாட்டிற்கு உதவும்
பிரதமர் அறிவித்த தேசிய ஊடக நிதி தொழில் துறை மேம்பாட்டிற்கு உதவும
கோலாலம்பூர், ஜூன் 16: உள்ளூர் ஊடக நிறுவனங்களுக்கு உதவும் வகையில் RM30 மில்லியன் தேசிய ஊடக நிதி ஒதுக்கீட்டைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு ஊடகத் துறையினர், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களைத் தூண்டியுள்ளது.
பின்னணி மற்றும் முக்கிய நோக்கங்கள்
2025ஆம் ஆண்டு தேசியப் பத்திரிகையாளர் தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் இந்த நிதியை வெளியிட்டார்.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சமூக ஊடகப் பெருக்கம் காரணமாகப் பொருளாதார ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பாதிக்கப்பட்ட பாரம்பரிய ஊடகங்களின் நிலைத்தன்மையை ஆதரிப்பதே இதன் முக்கிய நோக்கம். டிஜிட்டல் மயமாக்கல், பயிற்சி மற்றும் தரமான உள்ளடக்க மேம்பாட்டிற்கு இந்த நிதி உதவும்.
நன்மைகளும் அபாயங்களும்
இந்த நிதி, ஊடகங்களின் சம்பாதிக்கும் வழிமுறைகளை வலுப்படுத்தி, சுதந்திரமான செயல்பாட்டிற்கு உதவும் எனப் பார்க்கப்படுகிறது. வெளிப்படையான முறையில் நிர்வகிக்கப்பட்டால், இது ஊடகங்கள் பெருநிறுவன அல்லது அரசியல் செல்வாக்கைச் சார்ந்து இருப்பதை குறைக்கும்.
இருப்பினும், நிதியுதவி அரசியல் சார்புத் தன்மையை உருவாக்கக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது. நிதியின் விநியோகக் கிரித்தேரியங்கள் தெளிவில்லாமல் இருப்பது, ‘அரசியல் வெகுமதி’ எனக் கருதப்படலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. மேலும், இது ஒரு குறுகியகாலத் தீர்வு மட்டுமே என்றும், கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் இல்லாமல் தொழில்துறையின் பிரச்சினைகள் தொடரும் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சீர்திருத்தக் கோரிக்கைகள்
ஊடக நிதியை மலேசிய ஊடக மன்றம் போன்ற ஒரு நடுநிலையான அமைப்பு நிர்வகிக்க வேண்டும் எனப் பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். அனைத்துப் பயனாளர்களும் தாக்க அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சிறிய, உள்ளூர் மற்றும் சிறுபான்மை மொழி ஊடகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. நிதி உதவியுடன், தகவல் அணுகல் சட்டங்கள் மற்றும் பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
இந்த நிதி ஒதுக்கீடு ஒரு முக்கியமான ஆரம்பப் புள்ளி என்றாலும், அதன் வெளிப்படையான மற்றும் நேர்மையான செயலாக்கமே மலேசிய ஊடகத் துறையின் சுதந்திரமான மற்றும் பொறுப்புக்கூறல் தன்மையை உறுதிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.



