
இந்திய சமுதாயத்திற்கு நண்பா திட்டம் வழி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்
கோலாலம்பூர், ஜூன் 22-
Program Nadi Aspirasi Anak Muda எனும் நண்பா திட்டம் இந்திய இளைஞர்களின் நலனுக்காக தொடர்பு துறை அமைச்சின் கீழ் இயங்கும் J-KOM அமைப்பால் இயக்கப்படும் ஒரு முக்கிய திட்டமாகும்.
நட்பை மையப்படுத்தி நண்பா எனும் தமிழ்ச்சொல்லை பயன்படுத்தி இத்திட்டம் இந்திய இளைஞர்கள்-அரசாங்கத்திற்கு இடையில் ஒரு பாலமாக செயல்படுகிறது. Program Nadi Aspirasi Anak Muda எனும் சொல்லின் சுருக்கமே நண்பா திட்டமாகும்.
இந்திய சமுதாயத்தின் நோக்கம் என்ன? எதிர்ப்பார்ப்புகள் என்ன? தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வழிமுறைகள்்போன்றவைகளை ஆராய்ந்து இந்திய சமுதாயம்-அரசாங்க ஆகிய இருதரப்புக்கு இடையில் ஒரு புரிந்துணர்வை நண்பா திட்டம் உருவாக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
மலேசிய மடானி அரசாங்கம் இந்திய இளைஞர்களுக்கு வழங்கும் வாய்ப்புகளை பகிர்ந்து கொள்வது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும் இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து இந்திய இளைஞர்கள் தெரிந்து கொள்வதும் நண்பா திட்டத்தின் இலக்காகும்.
கடந்த மாதம் கூலாயில் அறிமுகம் கண்ட நண்பா திட்டம், ஜூன் 28ஆம் தேதி கோலாலம்பூர் லெம்பா பந்தாய் IWK ECO பூங்காவில் உள்ள மெர்பாவ் மண்டபத்தில் காலை 8 மணி தொடங்கி மாலை 4 மணிவரையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வை தகவல், தொடர்பு அமைச்சர் ஃபாஹமி ஃபாட்சில் காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் குறிப்பாக விளக்க கூட்டங்கள், புதையல் வேட்டை, தனியார் நிறுவன முகப்பு, அரசாங்க துறை முகப்பு, கண்காட்சி, வர்ணம் தீட்டும் போட்டி, ரஹ்மா மடானி விற்பனை, மெக்டோனல் நிறுவனம் சிறார்களுக்கு வழங்கும் மனமகிழ்வு நிகழ்வு மற்றும் அதிர்ஷ்டக்குலுக்கு உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறவிருப்பதால் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



