
கோவில் ஹராம், டேவான் ஹராம் என்ற இழிச்சொல் இனி வேண்டாம்
பினாங்கு, ஜூன் 22-
கோவில் ஹராம், டேவான் ஹராம் என்ற இழிச்சொல் இனி எழாமல் இருக்க, நாம் நமது இலக்கை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்.
கோயில் நிர்வாகங்கள் தங்களது அரும்பணியாக சொந்த நிலங்களை பெற்றிருக்க வேண்டும்.
அந்த வகையில் நமது ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானம், ஒரு பெரிய ஆலயமாக இவ்வட்டாரத்தில் மிக நேர்த்தியாகவும், பிரசித்திப் பெற்ற ஒரு ஆலயமாகவும் செயல்பட்டு வருகின்றதை அறிந்து, அம்மனின் ஆசியுடன் என்னால் இயன்றளவு உதவிட முன் வந்துள்ளேன் என பினாங்கு மாநில வீடமைப்பு சுற்று சூழல் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு கூறினார்.

தாம் மாநில அரசாங்க ஆட்சிக் குழுவில் பதவியேற்ற இந்த 22 மாதங்களில் தனியார் நிலங்களில் செயல் பட்டு வந்த சுமார் 6 இந்து ஆலயங்களுக்கும் ஒரு சீன ஆலயத்திற்கு, ஓர் தமிழ்ப்பள்ளிக்கும் நிலம் பெற்று தந்தும், வாங்கியும் தந்துள்ளேன் என்றார்.
ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சனைக்கு தாம் முக்கியத்துவம் தந்து
வருவதாகவும் அதனின் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாகம் தம்மை சந்தித்து உதவி கேட்ட போது, இந்த ஆலயத்திற்கு எப்படியாவது நல்லுதவி வழங்க வேண்டும் என்று என் மனம் சொன்னது.
ஆலய சேமிப்பு குறித்து கேட்ட போது 50 ஆயிரம் கையிருப்பு இருப்பதை அறிந்தவுடன் மகிழ்ச்சியடைந்தேன்.
உடனே அந்த நிலத்தை நாம் வாங்கிடுவோம் என்று நிர்வாகத்தினருக்கு உற்சாக மூட்டினேன். முதல் தவணையாக செலுத்தக்கூடிய ஒரு லட்சம் வெள்ளிக்கு நான் என் சொந்தப் பணமாக 50 ஆயிரம் வெள்ளி வழங்குவதாக கூறி மறுநாளே அப்பணத்தை வங்கியில் செலுத்தி விட்டேன்.
அதன்படி வீடமைப்பு நிறுவனத்திற்கு முதல் தவணைப் பணத்தை செலுத்தி ஒப்பந்தமும் செய்யப்பட்டு விட்டது.
அதனையடுத்து இரண்டாம் கட்ட தவணைக்கான ஒரு லட்சம் வெள்ளி, இன்றைய விருந்தோம்பல் வழி திரட்டிட முடிவெடுத்தோம்.
ஆலய நிர்வாகமும் அதன் தலைவரும் நம்மோடு கைகோர்த்து செயல்பட்டதனால் 2 லட்சம் திரட்டிட, இந்த சாதனையை புரியா வாய்ப்பேற்பட்டதாக கூறிய போது, விருந்தினர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி ஆதரவளித்து மகிழ்ந்தனர்.
இதனிடையே, ஆலய தலைவர் திரு.மு.வ.கலைமணி தமதுரையில் டத்தோஸ்ரீ சுந்தராஜு அவர்களின் சாதனைகனை எடுத்துரைத்தார்.
கட்சி பேதங்கள் பாராது, வேண்டியவர், வேண்டாதவர் என பாகுபாடு பார்க்காத நல்ல மனம் கொண்ட ஒரு சமூக, சமய சேவகரை பெற்றிருப்பது பினாங்கு வாழ் மக்கள் செய்துள்ள தர்மமாக கருதுகிறோம்.
அவரின் சேவைகள் தொடர வேண்டும், என்றுமே தாமும் தமது நிர்வாகத்தினரும், பொதுமக்களும் அவருக்கு விசுவாசமாகவே இருப்போம் என்று பெரும் கரவொலிக்கிடையே பேசினார்.
மூன்று லட்சம் நம் லட்சியம் என்ற நிர்வாகத்தினரின் கனவு நனவாகியுள்ளதாக
அவர் பெருமிதத்துடன் கூறினார்.



