
ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் துணைச்செயலாளர், பொருளாலாரை பதவிகளை தவிர்த்து அனைத்து பதவிகளுக்கும் போட்டி
ஈப்போ, ஜுன் 22- ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் 2025- 2027 ஆண்டிற்கான நிர்வாக்குழு தேர்தலின் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் துணைச்செயலாளர் பதவிக்கு எம்.குமரகுரு மற்றும் பொருளாலர் பதவிக்கு போட்டியிட்ட கே.ஆண்டாள் நேசன் போட்டியின்றி வெற்றிப்பெற்றனர் என்று இத்தேர்தல் அதிகாரி வழக்கறிஞர் எம்.மதியழகன் கூறினார்.
ஆனால், மற்ற அனைத்து பதவிகளுக்கும் போட்டியுள்ளது. அதோடு, ஸ்ரீ இலங்கன் செயற்குழு விவகாரத்தில் இருவர் போட்டியின்றி தேர்வாகினர். அவர்களில், பி.உமாபரம் மற்றெருவர் தயாளன் ஆவார்.
இம்முறை நடப்பு தலைவர் இரா.சீதா இராமனை எதிர்த்து எஸ்.நடேசன் போட்டியிடுகிறார். உதவித்தலைவர் பதவிக்கு நடப்பு உதவித்தலைவர் கே.சுரேனை எதிர்த்து சண்முகம் போட்டியிடுகிறார். அதுபோலவே, நடப்பு செயலாளர் வி.எம். தியாகராஜனை எதிர்த்து மாதவன் போட்டியிடுகிறார் என்று அவர் அறிவித்தார்.
இந்த தேவஸ்தானத்திற்கு எண்மர் செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், இம்முறை 12 நபர்கள் இப்பதவிக்கு போட்டியிடுவதாக அவர் அறிவித்தார். அவர்களில், ஆர்.சிவபாலன், கோபிநாதன், நீலகண்டன், கண்ணையா, டாக்டர் சசிதரன், மனோகர், பி.புருசோத்துமன், பன்னீர் செல்வம், இந்திரநாதன், ஆறுமுகம், கேசவன் மற்றும் சரவணன் ஆகியோராவா் என்று அவர் குறிப்பிட்டார்.
தணிக்கையாளர்கள்( ஆடிட்டர்) பதவிக்கு இருவர்களான கிருஷ்ணன் மற்றும் தண்ணீர்மலை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேவஸ்தானத்தின் பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல், வரும் 29.6.2025( ஞாயிற்றுக்கிழமை) காலை மணி 9.30 க்கு புந்தோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மதியம் 12 .00 மணி முதல் 2.00 வரை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி எம்.மதியழகன் தெரிவித்தார்.
இத்தேர்தலில் இருந்து வாபஸ் பெற விரும்புவோர் வரும் 25.6.2025( புதன்கிழமை) மதியம் 12.00 க்குள் தங்களது வாபஸ் பாரத்தை தம்மிடம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பணமனையில் வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.



