
அன்வார் பதவி விலக வேண்டும்’ எனும் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை – USM மாணவர் பேராளர் மன்றம் அறிவிப்பு!
‘அன்வார் பதவி விலக வேண்டும்’ எனும் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை – USM மாணவர் பேராளர் மன்றம் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூலை 23
தலைநகரில் நடைபெறவிருக்கும் “அன்வார் பதவி விலக வேண்டும் எனும்” பேரணியில் உயர் கல்வி மாணவர்கள் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் (யு.எஸ்.எம்.) மாணவர் பேராளர் மன்றம் (MPP USM) பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.
யு.எஸ்.எம். மாணவர்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரப்பூர்வ அமைப்பான மாணவர் பேராளர் மன்றம், நாட்டின் தற்போதைய தலைமைத்துவம் மற்றும் கொள்கைகள் உட்பட மாணவர்கள் மத்தியில் நிலவும் பல்வேறு கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிறது. எனினும் ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ள அந்த பேரணியில் பங்கேற்க போவதில்லை என்று அது கூறியது.
ஒவ்வொரு மாணவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு என்பதை யு.எஸ்.எம். மாணவர் பேராளர் மன்றம் நிலைநிறுத்துகிறது. எந்தவொரு தரப்பை ஆதரித்தாலும் அல்லது எதிர்த்தாலும் அது புத்திசாலித்தனமாகவும், அமைதியாகவும், சட்டபூர்வமான வழிகளிலும் செய்யப்பட வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக, “அன்வார் பதவி விலக வேண்டும்” என்ற பேரணி உட்பட, எந்தவொரு கட்சி சார்பு பேரணியிலும் யு.எஸ்.எம். மாணவர் பேராளர் மன்றம் அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்காது அறிவித்துள்ளது.
யு.எஸ்.எம். மாணவர் பிரதிநிதித்துவ மன்றம் ஒரு சுதந்திரமான, நடுநிலையான மற்றும் எந்தவொரு அரசியல் சித்தாந்தத்திற்கும் சாராத ஒரு அமைப்பாக நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்காக இந்த அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளையில், யு.எஸ்.எம். மாணவர் பேராளர் மன்றம், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் தற்போது செமஸ்டர் இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருவதை வலியுறுத்த விரும்புகிறது.
எனவே, யு.எஸ்.எம். மாணவர்கள் அனைவரும் தற்போது நடைபெற்று வரும் தேர்வுகளில் முழு கவனம் செலுத்துமாறு தாங்கள் கேட்டுக் கொள்வதாக ஒரு அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.



