
தீவிர எச்சரிக்கை: பள்ளி மாணவி குத்திக் கொலை சம்பவத்தின் படங்கள், வீடியோக்களைப் பரப்ப வேண்டாம் மிரட்டல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என MCMC ஆணையம் எச்சரிக்கை!
கோலாலம்பூர்,அக்.16- பண்டார் உத்தாமா பகுதியிலுள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் கத்திக் குத்துக்கு ஆளான 16 வயது மாணவியின் மரணம் குறித்து மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. அதே சமயம், பாதிக்கப்பட்ட மாணவி அல்லது சம்பவ இடத்தின் படங்கள், காணொளிகளைப் பகிர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு MCMC அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவம் குறித்த எந்தவொரு உள்ளடக்கத்தையும், அதாவது பாதிக்கப்பட்டவர், பிற மாணவர்கள் அல்லது சம்பவ இடத்தைக் காட்டும் படங்கள் மற்றும் காணொளிகள் உட்பட – பகிரவோ, மறுபதிவேற்றம் செய்யவோ அல்லது பதிவேற்றவோ கூடாது என்று அனைத்துத் தரப்பினரையும் MCMC பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே பதிவேற்றப்பட்டிருந்தால், உடனடியாக அவற்றை நீக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. “பாதிக்கப்பட்டவரின் படங்களையும் காணொளிகளையும் பரப்புவது, சம்பந்தப்பட்ட குடும்பத்தின் தனியுரிமையையும் கண்ணியத்தையும் மீறுவதோடு மட்டுமல்லாமல், அரச மலேசிய போலீஸ் படையால் (PDRM) மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையையும் பாதிக்கக்கூடும்,” என்று MCMC தெரிவித்துள்ளது. இத்தகைய உள்ளடக்கத்தைப் பரப்புவோர் மீது, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 (சட்டம் 588)-இன் பிரிவு 233 இன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் MCMC கடுமையாக எச்சரித்துள்ளது. மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) பெருநிறுவனத் தொடர்புப் பிரிவு ஒரு அறிக்கையில் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.



