
செந்தூல் ஸ்ரீ நாகம்மன் ஆலயப் பிரச்சினை ம.இ.கா மீதும் டத்தோ ராமலிங்கம் மீதும் சீறிப்பாய்ந்தார் பிரபாகரன்
செந்தூல் ஸ்ரீ நாகம்மன் ஆலயப் பிரச்சினை ம.இ.கா மீதும் டத்தோ ராமலிங்கம் மீதும் சீறிப்பாய்ந்தார் பிரபாகரன்
கோலாலம்பூர்:
செந்தூல் ஸ்ரீ நாகம்மன் ஆலயப் பிரச்சினையை மஇகா அரசியலாக்கி விட்டதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் டத்தோ ராமலிங்கம் மீது சீறி பாய்ந்தார்.
இந்த ஆலய பிரச்சினைக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் எதையும் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இது முற்றிலும் தவறாகும். ஆலய பிரச்சினைக்கு ஆலய நிர்வாகமே காரணம் என்று பிரபாகரன் தெளிவுபடுத்தினார்.
ராமலிங்கம் அவர்களே உங்களுக்கு என்ன பைத்தியமா? முரண்பாடான கருத்துகளை வெளியிட்டுள்ளீர்கள். இப்படி பொய் சொல்லும் நீங்கள் எப்படி இரவில் தூங்குவீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று பிரபாகரன் சரமாரியாக சாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆலயத்தை காப்பாற்ற வேண்டும் என டத்தோ ராமலிங்கமும் ஆலய செயலாளரும் என்னை வந்து சந்தித்தனர்.
அதன் அடிப்படையில் இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது.
ஒய்டிஎல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. ஆனால் மேம்பாட்டு நிறுவனத்தில் எந்தவொரு இழ்ப்பீட்டையும் ஆலய நிர்வாகத்தினர் ஏற்கவில்லை என்று பிரபாகரன் விளக்கினார்.
நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தற்போது மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப்படி இந்த ஆலயப் பிரச்சினைக்கு தீர்வு காண ஆரம்பத்தில் இருந்தே நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வருகிறேன். ஆனால் மஇகாவினர் இந்த விவகாரத்தை அரசியலாக்கியதுடன் எனக்கு எதிரான அவதூறுகளை பரப்பியுள்ளனர். அவர்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் செய்துள்ளேன். சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளவிருப்பதாக பிரபாகரன் சொன்னார்.
இந்த ஆலய பிரச்சினைக்கு முழுக்க முழுக்க ஆலய நிர்வாகமே காரணம். இதற்கான ஆதரங்கள் என்னிடம் உள்ளது.
மேலும் எனக்கு எதிராக அவதூறுகளை பரப்பிய ஏகே ராமலிங்கம் மீது போலீஸ் புகார் செய்துள்ளேன். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று பிரபாகரன் கொந்தளித்துள்ளார்.



