IndiaInternationalMalaysia

வலியையும் வலிமையாக்கி தடைகளை தகர்த்தெரியும் பண்புகளை நாம் கண்டறிய வேண்டும் ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்து

சென்னை,ஜன.7-

வலியையும் வலிமையாக்கி தடைகளை தகர்த்தெரியும் பண்புகளை கண்டறிய வேண்டும் ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார்.

காலம் இன்று புதிய இலக்கை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

மன ஆற்றலும் மனித ஆற்றலும் இணைந்து ஒன்றுபட்டால் வெற்றிப் பெறலாம் என உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழக வளாகத்தில் முப்பெரும் விழாவாக நடைபெற்று வரும் 10ஆவது உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவ்வாறு கூறினார்.

இ்லக்கியங்கள் தொடங்கி இன்றைய  இலக்கவியல் வரைக்கும் தமிழரின் பண்பாடு தன்னை காட்சிப்படுத்தி நிற்கின்றது. நாகரீகம் என்ற பெயரில் தலைமுறைகள் கடந்து விட்டாலும் தமிழரின் பண்பாட்டு கூறுகள் வாழ்வியலின் ஒவ்வொரு தளத்திலும் பின் தொடர்ந்து வருகிறது. மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதை விட எப்படி வாழக் கூடாது என்று வாழ்வியலை கற்றுக் கொடுத்த தமிழரின் பன்பாட்டு அடிச்சுவடுகள் இன்று உலகம் முழுவதும் தடம் பதித்து உள்ளது என்றார் டத்தோஸ்ரீ சரவணன்.

கடலும் கண்டங்களும் நம்மை பிரித்து வைத்திருந்தாலும், உலகில் வாழும் தமிழர்களை இணைக்கும் ஒரு விழாவாக இந்த பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு ஒன்று கூடல் நிகழ்ச்சியை தான் பார்ப்பதாக டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.

கடின உழைப்பின் மேன்மையாலும் வர்த்தகத்தாலும் பல்வேறு நாடுகளை முன்னேற்றம் அடையச் செய்தவர்கள் தமிழர்கள் என்பது உலக வரலாறு என அந்த உலக மேடையில் தமிழர்களின் உழைப்பின் பெருமையை பதிவு செய்தார் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்.

தமிழ் எங்கள் உயிர் என்பதாலே-வெல்லும் தரமுண்டு தமிழருக்கு புவிமேலே

நம் உயிர் போன்ற தமிழைப் பாதுகாப்பதற்கும் வளர்ச்சியடையச் செய்வதற்கும் நாம் எல்லாவித முயற்சிகளையும் தியாகங்களையும் செய்வதற்குத் தயார் ஆக வேண்டும் என கூறுகிறார் பாரதிதாசன் அதனை நாம் பின்பற்ற வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

இதனிடையே இந்த மாநாட்டில், உலக அளவில் சாதித்துள்ள தமிழ் வம்சாவளியினருக்கு ‘சாதனை தமிழன்’ விருது, வெளிநாடுகளில் தமிழ் மொழியை பரப்புவோருக்கு ‘நல்லாசான்’ விருது, சோதனைகளை வென்றவர்களுக்கு ‘தலை நிமிர்ந்த தமிழன்’ விருது என பல விருதுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button