Malaysia

தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் முயற்சியில் பிரதமர் துறைக்கு கொண்டு வரப்பட்ட மித்ராவை ஏன் இப்படி பந்தாடுகிறார்கள்? ஒற்றுமை அமைச்சின் கீழ் மீண்டும் கொண்டு வரப்பட்டது அரசியல் நோக்கம் கொண்டதா? மித்ரா பிரதமர் துறையில் இருப்பது உத்தமம் பிரதமர் அன்வார் சிந்திப்பாரா?

கோலாலம்பூர்,பிப்.17-

இந்திய சமூகத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் செடிக் எனும் பெயரில் உருவாக்கப்பட்டு மித்ரா என்று உருமாற்றம் கண்ட இந்தியர் உருமாற்றப் பிரிவான இந்த அமைப்பை ஏன் இப்படி பந்தாடுகிறார்கள் எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மித்ராவை அதன் செயற்குழுத்தலைவர் பி்.பிரபாகரன் சரியான பாதையில் வழி நடத்துவாரா எனும் கேள்வியைவிட மித்ராவை ஏன் இப்படி பந்தாடுகிறார்கள் எனும் கேள்விதான் உயரந்து நிற்கிறது. பிரபாகரன் மித்ராவை எத்தகைய திட்டங்களுடன் வழி நடத்துவார் என்பது அவரது செயல்பாடுகளை கொண்டுதான் நிர்ணயம் செய்ய முடியும். பிரபாகரனின் கல்வி தகுதி அதனை முடிவு செய்வதில்லை. மாறாக அவரது திட்டங்கள்தான் அதனை முடிவு செய்யும் என்பது திண்ணம்.

ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் பெருமுயற்சியில் பிரதமர் துறைக்கு கொண்டு வரப்பட்ட மித்ராவை ஏன் இப்படி பந்தாடுகிறார்கள்? மித்ராவில் நல்லசெயல் திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமே தவிர இப்படி அடிக்கடி இடமாற்றம் செய்வதால் மித்ரா இலக்கு சிதைந்துவிடும் என்பதை அரசாங்கம் உணரவில்லையா?

தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களால் சிரமப்பட்டு பிரதமர் துறைக்கு கொண்டு வரப்பட்ட மித்ராவை வலிக்காமல் மீண்டும் ஒற்றுமை அமைச்சின் கீழ் மீண்டும் கொண்டு சென்று விட்டார்கள். இதற்கு அரசியல் நோக்கம் காரணமா எனும் கேள்வி தற்போது மக்கள் மனதில் எழுந்துள்ளது.
மித்ரா பிரதமர் துறையில் இருப்பது உத்தமம். இதனை
பிரதமர் அன்வார் சிந்திப்பாரா?

ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் ம.இ.கா கோரிக்கைக்கு ஏற்ப ஒற்றுமை துறை அமைச்சில் இருந்த மித்ரா 2022இல் பிரதமர் துறைக்கு மீண்டும் மாற்றப்பட்டது.

ஆனால், தற்போது அது மீண்டும் ஒற்றுமை துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்படி எத்தனை முறை அங்கும் இங்கும் மித்ராவை பந்தாடுவார்கள் எனும் கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்திய சமூக, பொருளாதார உருமாற்றப்பிரிவான மித்ரா கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் செடிக் எனும் பெயரில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அவர்களால் அமைக்கப்பட்டது.
இந்திய சமுதாய நலன் கருதி உருவாக்கப்பட்ட செடிக் எனும் மலேசிய இந்திய பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு மறுவடிவம் கொடுத்திருந்தது.

இந்த செடிக் அமைப்பிற்கு டத்தோ டாக்டர் என்.எஸ்.ராஜேந்திரன் தலைவராக இருந்தார். அதன்பிறகு கடந்த 2018இல் ஒற்றுமை துறை அமைச்சராக வேதமூர்த்தி பதவி ஏற்ற பிறகு செடிக் அமைப்பை மித்ரா என்று பெயர் மாற்றினார்.

செடிக்கிற்கு மறுவடிவம் வழங்க பெயர் மாற்றியதாக வேதமூர்த்தி கூறியிருந்தார். உருமாற்றம் கண்ட மித்ரா அதன் தோற்றத்தில் இருந்து மட்டும்தான் மாறியதே தவிர வேண்டியவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது என்பது ஏர் அறிந்த உண்மை. இதனை மலேசிய ஊழல் துறையும் பல செய்திகளில் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் கூறுகின்றன.

வேதமூர்த்தி ஒற்றுமை துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகிய பிறகு அந்த அமைச்சுக்கு வந்த டத்தோ ஹலிமா மித்ராவை வழி நடத்தினார். அப்போதும் பாமரமக்களின் வாழ்வாதாரத்தை மித்ராவால் மேம்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக பதவி ஏற்ற பிறகு மித்ரா பிரதமர் துறைக்கு மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்பதோடு மித்ராவின் கீழ் அறவாரியம் ஒன்று அமைக்கபட்டு அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட நிதி அந்த அறவாறிய கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கோரிக்கையை ஏற்று மித்ரா பிரதமர் துறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் 2022 பொதுத்தேர்தலுக்குப் பிறகு மித்ராவுக்கு பல போராட்டங்கள். இந்த போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் துறையில் இருந்த மித்ரா சிறப்பு செயற்குழுத்தலைவராக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த ஓராண்டு காலத்தில் டத்தோ ரமணன் சில திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அத்திட்டங்கள் சர்ச்சையானது. அதில் பலருக்கு அதிருப்தி. கல்வியமைச்சு, சுகாதார அமைச்சின் வேலைகளை மித்ரா ஏன் பார்க்க வேண்டும் எனும் கேள்வி எழுந்தது. மித்ரா குழுவில் இடம்பெற்றிருந்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் அதிருப்தியில் அக்குழுவில் இருந்து வெளியேறினார்.

இந்த சூழலில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இதில் டத்தோ ரமணன் தொழில்முனைவர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சராக நியமனம் பெற்றார்.
இதில் மித்ரா செயற்குழு தலைவர் பதவி யாருக்கு வழங்கப்படும் எனும் கேள்வி எழுந்திருந்தது. பலரும் மித்ரா பதவிக்கு போட்டி போட்டனர்.

இச்சூழலில் மித்ரா மீண்டும் ஒற்றுமை துறை அமைச்சுக்கு மாற்றம் செய்யப்பட்டது. மித்ரா செயற்குழுத்தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் பிரதமரால் நேரடியாக நியமிக்கப்பட்டார். பிரபாகரன் மித்ராவை எப்படி வழிநடத்துவார் என்பது அவரது செயல்பாடுகளை கொண்டுதான் நிர்ணயிக்க முடியும். இப்போது எதனையும்
சொல்வதற்கில்லை. பிரபாகரன் கல்வித்தகுதி அதனை முடிவு செய்யாது. மாறாக அவரது திட்டங்கள்தான் அதனை முடிவு செய்யும் என்பதுதான் நடைமுறை உண்மை.

இப்போது மித்ரா குறித்து கேள்வி ஒன்றுதான். பிரதமர் துறைக்கு கொண்டுச் செல்லப்பட்ட மித்ரா மீண்டும் ஒற்றுமை அமைச்சுக்கு கொண்டுச் செல்லப்பட்டது ஏன்?இதன் பின்னனி என்ன? இந்த மாற்றம் அரசியல் நோக்கம் கொண்டதா? மித்ராவை ஏன் இப்படி பந்தாடுகிறார்கள்? இதனால் மித்ராவின் இலக்கு சிதைந்து போய்விடும் என்பதை அரசாங்கம் உணரவில்லையா?

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு தேசம் ஊடகத்தின் மனம் திறந்த வேண்டுகோள்.
மித்ரா பிரதமர் துறையின் கீழ் இருப்பது உத்தமம்.
மித்ராவை அரசியல் நோக்கத்திற்காக ஒற்றுமை அமைச்சின் கீழ் வைக்காமல் இந்திய சமுதாய மக்கள் நலன்கருதி மீண்டும் பிலதமர் துறை அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதன் செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button