
பள்ளி நேரத்திலேயே கணினி வகுப்பு நடத்தப்பட வேண்டும். அதுவே எங்களின் போராட்டம் சிலாங்கூர் தமிழ் சங்க தலைவர் எல்.சேகரன் கோரிக்கை
தேசம் செய்திகள் குணாளன் மணியம், ஒளிப்பதிவாளர் ரேவதி குணாளன்
பெட்டாலிங் ஜெயா,பிப்.29-
கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக கணினி வகுப்புகள் நடந்து வந்த நிலையில் அதனை ஒரு சிலரின் தனிப்பட்ட சுயநலத்திற்காக ரத்து செய்வது கண்டிக்கத்தக்கது என்று சிலாங்கூர் தமிழ் சங்கத்தின் தலைவர் எல். சேகர் கூறினார்.
ஒரு சில புகார்களின் அடிப்படையில் இந்த கணினி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முன்னாள் தலைமையாசிரியருடன் கூட்டு சேர்ந்து கணினி வகுப்பை ரத்து செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜாலான் காசிங் லோட்டஸ் உணவகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எல்.சேகரன் அவ்வாறு தெரிவித்தார்.
இப்பள்ளியில் கணினி வகுப்புகளை அமைக்க பல நல்லுள்ளங்கள் உதவி உள்ளன. கணினி அறை, 150 கணினிகள் என அனைத்தும் உள்ளன. சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மானியமும் வழங்கப்படுகிறது.
இருந்தாலும் இக்கணினி வகுப்பு ஒரு சில காரணங்களால் நிறுத்தப்படுவது பெரும் வருத்தத்தை அளிப்பதாக சேகரன் சொன்னார்.

இந்த நவடிக்கையால் ஏழை மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். அதே வேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் பள்ளி நேரத்தில் தற்போது கணினி வகுப்புகள் நடக்கிறது. தற்போது சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியை உதாரணம் காட்டி மற்ற பள்ளிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த பிரச்சினைக்கு கல்வியமைச்சு உரிய தீர்வு காண வேண்டும் என்று சிலாங்கூர் தமிழ் சங்கத்தின் தலைவர் எல். சேகர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வாரியக் குழுவும் பள்ளி நிர்வாகும் இந்த வகுப்புக்கு ஆதரவு வழங்கின்றன. ஆனால் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் எதிர்ப்பாக உள்ளதாக சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் நடவடிக்கை குழு தலைவரும் பெற்றோருமான நாகராஜா சின்னையா தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் தான் சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு இந்த கணினி வகுப்புக்காக போராடி வருகிறோம். பள்ளி நேரத்தில் கணினி வகுப்பு வேண்டும். அதுவே எங்களின் போராட்டம் என்று நாகராஜா கூறினார்.



