
தான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு முழு ஆதரவு உண்டு கட்சிக்கு வலு சேர்க்கும் சிறந்த தலைவர்… ம.இ.காவின் மேல்மட்ட தலைவர்கள் மஇகா தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டார்கள் டத்தோஸ்ரீ சரவணன் அறிவிப்பு
தேசம் செய்திகள் குணாளன் மணியம் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், மார்ச் 19-
ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தை கட்சியின் அனைத்து தரப்பும் முழுமையாக ஆதரிக்கிறது என்பதால் அவர் தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார் .
துன் சாமிவேலுக்கு பிறகு கட்சிக்கு அதிக சொத்துகளை சேர்த்தவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் என்பதால் கட்சி தலைமைத்துவத்தை அவர் தொடர்ந்து வழி நடத்த வேண்டும் என்று ம.இ.கா தலைமையகத்தில் அது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டோம் என நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
டத்தோஸ்ரீ சரவணன் தலைவர் பதவி தேர்தல் குழு தலைவராக பணியாற்றவிருக்கிறாரர். இவ்வாண்டு மஇகாவின் தேர்தல் ஆண்டு என்பதால் அனைத்து பிரிவுகளிலும் தேர்தல் கட்டம் கட்டமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனுதாக்கல் வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒருவேளை தலைவர் பதவிக்கு போட்டி இருந்தால் அதற்கான தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும்.
தலைவர் பதவியில் போட்டியிட விரும்புவோர் குறைந்தது 250 வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்புமனுவில் முன்மொழிபவரும் வழிமொழிபவரும் கிளைத் தலைவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் 2024 கிளைக் கூட்டத்தை முறையாக நடத்திருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.



