
உண்மையை மூடி மறைக்க முடியாது புவவேஸ்வரன், நந்தகுமார், பவளச்செல்வன் காவல்துறையில் புகார்
தேசம் செய்திகள் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், மே 23-
தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி 2 மில்லியன் வெள்ளி பேரம் பேசியதாக தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளிவந்த ஒரு செய்தி அப்பட்டமான பொய் என்று ஊடகவியலாளர் ப.புவனேஸ்வரன் கூறியுள்ளார்.
அந்த பிரபல தொழிலதிபர் என் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் அவரது பத்திரிகையில் அவதூறான செய்தியை வெளியிட்டுள்ளார். என்னை மட்டுமன்றி தன் சக ஊடகவியலாளர்களான நந்தகுமார் மற்றும் பவளச்செல்வன் மீது அவதூறு கூறியுள்ளார். இது குறித்து மூவரும் காவல்துறையில் புகார் செய்துள்ளதாக புவனேஸ்வரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சீட் வாங்கித் தருவதற்கு பிரபல மருந்துவரிடமிருந்து 2 மில்லியன் வெள்ளி வாங்கித் தருவதாக பேரம் பேசியதாக ஓம்ஸ் தியாகராஜன் கூறியிருப்பது அப்பட்டமான பொய்!
நீங்கள் உண்மையை மூடி மறைக்க முடியாது. நீங்கள் டாக்டரிடம் வாங்கிய ஒரு லட்சம் வெள்ளி என்னவானது? நீங்கள் பேரம் பேசியதை எல்லாம் மறந்து விட்டு நாங்கள் 2 மில்லியன் பேரம் பேசியதாகவும் அதற்கு 6 லட்சம் வெள்ளி முன்பணத்தை பெற்றுக் கொண்டதாகவும் சம்பந்தப்பட்ட தொழிலதிபர் தமது பத்திரிகையில் வெளியிட்டிருக்கும் செய்தி அப்பட்டமான பொய் செய்தி என்று புவவேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அந்த தொழிலதிபர் தமது தமிழ்ப் பத்திரிகையை காப்பாற்ற ஒரு லட்சம் வெள்ளி கடனாக வாங்கியதை ஏன் சொல்லவில்லை? என்னையும் பவளத்தையும் மருத்துவரிடமிருந்து நிரந்தரமாக வெளியேற்ற நீங்கள் பேரம் பேசியதை ஏன் சொல்லவில்லை? நீங்கள் செய்ததை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், நாங்கள் செய்யாததை சொல்லி பொய்யுரைத்த உங்கள் செயல்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கட்டும் என்று புவனேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மூத்த ஊடகவியலாளர் தேசம் குணாளன் மணியம் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.a



