
ம.இ.கா மகளிர் பிரிவு தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை டத்தோ மோகனா முனியாண்டி அறிவிப்பு
தேசம் பிரத்தியேக செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர், ஜூன் 6-
ம.இ.கா மகளிர் பிரிவு தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று நடப்பு தலைவர் டத்தோ மோகனா முனியாண்டி அறிவித்துள்ளார்.
நான் கடந்த 9 ஆண்டுகள் அதாவது மூன்று தவணைகள் ம.இ.கா மகளிர் பிரிவு தலைவியாக இருந்து வந்துள்ளேன். ஆகையால், மற்றவர்களுக்கு வழிவிட்டு மகளிர் பிரிவு தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தேசம் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றில் டத்தோ மோகனா முனியாண்டி அவ்வாறு கூறினார்.
நான் மகளிர் பிரிவு தலைவியாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். இதில் குறிப்பாக மகளிர்களுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தியதோடு மகளிர்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துள்ளதாக மோகனா முனியாண்டி தெரிவித்தார்.
இந்நிலையில் ஒரு துறையில் மாற்றம் என்பது தேவையான ஒன்றுதான். புதியவர்கள் புதிய சிந்தனையோடு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவிட தயாராகி விட்டேன். ஆகையால், எதிர்வரும் ம.இ.கா மகளிர் அணி தலைவி பதவிக்கு போட்டியிடவில்லை என்று டத்தோ மோகனா முனியாண்டி சொன்னார்.
நான் ம.இ.கா மகளிர் அணி தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்றாலும் ம.இ.காவில் தொடர்ந்து சேவையாற்ற விரும்புகிறேன். அதேநேரத்தில் அடுத்த கட்ட நிலையை அடைய தாம் தயாராகி வருவதாக டத்தோ மோகனா முனியாண்டி குறிப்பிட்டுள்ளார்.



