
உழைப்பவர்களைக் கொண்டாடுவோம் தொழிலாளிகள் அனைவரும் நலத்துடனும், வளத்துடனும் இருக்க வாழ்த்துவோம் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தொழிலாளர் தின வாழ்த்து
கோலாலம்பூர், ஏப்.30-
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப
உலகில் உள்ள தொழிலாளர்கள் அனைவரையும் கொண்டாடும் வகையில் முதலில் தன் இனிய ‘தொழிலாளர் தின நல்வாழ்த்துகளை ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
உழைப்பவர்களைக் கொண்டாடும் இந்த நாளில் தொழிலாளிகள் அனைவரும் நலத்துடனும், வளத்துடனும் இருக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. உழைக்கும் வர்க்கம் இருப்பதால்தான் மனிதனின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு அடைந்து கொண்டே போகிறது.
உழைக்கும் ஒரு தனிமனிதனின் வளர்ச்சி அந்த குடும்பத்தை உயர்த்தும். அதன் வழி நாட்டின் வளர்ச்சி பெருகும்.

ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்று பொதுவாகச் சொல்வதுண்டு. அதுபோலவே வியர்வை சிந்தினால் மட்டுமே உயர்வை அடைய முடியும்.
வாழ்க்கையில் வெற்றி பெற எண்ணங்களும், திட்டங்களும் மட்டும் போதாது. அந்த எண்ணங்கள் செயல் வடிவம் பெற வேண்டும். முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கு மனித மூலதனம் மையமாக இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்கள் எழுச்சி பெற வேண்டும்.
அதே வேளையில் தொழில்புரட்சி 4.0 மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. பல்திறன் கொண்ட தொழிலாளர்களாக நம்மை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள்.. உழைப்பால் உயர்வோம் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமது தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



