
பயமின்றி ஜாலான் மஸ்ஜித் இந்தியாவிற்கு வாருங்கள் மக்கள் அச்சப்படத் தேவையில்லை டத்தோஸ்ரீ சரவணன் கூறுகிறார்
கோலாலம்பூர்,செப்.9-
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி புதையுண்டு மரணமடைந்ததை தொடர்ந்து இங்கு வருவதற்கு மக்கள் அச்சப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வணிகப் பகுதி பாதுகாப்பாக தான் உள்ளது. மக்கள் இங்கு வர அச்சப்பட வேண்டாம் என்று இப்பகுதிக்கு திங்கட்கிழமை பிற்பகல் உணவருந்த வந்த டத்தோஸ்ரீ எம். சரவணன் காணொளி ஒன்றின் வாயிலாக அவ்வாறு கூறினார்.
இந்த பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தால் இப்பகுதி பாதுகாப்பான ஒன்றல்ல என்று மக்கள் நினைப்பது முற்றிலும் தவறான கணிப்பு.
இப்பகுதிக்கு வருவதற்கும் மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த அச்சத்தில் இருந்து மக்கள் விடுப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா வணிகப் பகுதி மிகவும் பாதுகாப்பான நிலையில் உள்ளது. மக்களின் பாதுகாப்புக்காக அங்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இந்தப்பகுதியில் வர்த்தகம் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளது என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
மஸ்ஜித் இந்தியாவில் அதிகமான இந்தியர்கள் தங்கள் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விஜயலட்சுமி சம்பவத்திற்கு பிறகு ஜாலான் மஸ்ஜித் இந்தியாவுக்கு மக்கள் வரவில்லை என்றால் அது நமது வர்த்தகர்களுக்குதான் பெரும் பாதிப்பு என்பதால் மக்கள் வழக்கம் போல் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவிற்கு வந்து வர்த்தகர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டுள்ளார்.



